அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைப்பு
இந்த ஆண்டு அக்டோபர் 18 முதல் நவம்பர் 15ம் தேதிவரை டி20 உலக கோப்பை ஆஸ்திரேலியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டினர் உள்ளே நுழைய செப்டம்பர் மாதம் வரையில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 16 அணிகள் பங்கேற்கும் டி20 உலக கோப்பையை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
டி20 உலக கோப்பை
டி20 உலக கோப்பை தொடர் நடத்தப்பட வாய்ப்பில்லை என்று அனைத்து தரப்பினரும் கூறிவந்தநிலையில் தற்போது டி20 உலக கோப்பை அடுத்த ஆண்டு பிப்ரவரி -மார்ச் மாதங்களுக்கு தள்ளி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கிரிக்கெட் ஆஸ்திரேலியா மற்றும் ஐசிசி நிர்வாக உறுப்பினர்கள் ஆலோசித்துள்ள நிலையில், சில தினங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
வரும் 26 -28 தேதிகளில் ஐசிசி வீடியோ கான்பரன்சிங் மூலம் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தவுள்ளது. இதில் முக்கியமாக டி20 உலக கோப்பை குறித்த பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தின்போதே டி20 தள்ளி வைப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடைபெற வாய்ப்பு
அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஐபிஎல் தொடர் நடத்தப்படும் என்பதால் பிப்ரவரி -மார்ச் மாதங்களில் டி20 உலக கோப்பை தொடர் நடத்தப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது. இத்தகைய விஷயங்கள் ஐசிசி ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், மேலும் ஐசிசி தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.