இந்தியா பேட்டிங்
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் ரோகித் சர்மா டக் அவுட்டும், கே.எல்.ராகுல் 3 ரன்களுக்கும் அவுட்டாகி வெளியேறினர். இதன் பின்னர் வந்த சூர்யகுமார் யாதவும் 11 ரன்களுக்கு நடையை கட்டினார். ஆனால் மறுமுணையில் தூண் போன்று நின்றிருந்த விராட் கோலி அரைசதம் அடித்து இந்திய அணியை காப்பாற்றினார்.
கிங் கோலி
49 பந்துகளை சந்தித்த விராட் கோலி 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 57 ரன்களை விளாசினார். மீண்டும் ஒரு முறை கேப்டனாக நின்று இந்திய அணியை 151 ரன்கள் வரை தூக்கி சென்றார். அவருடன் உறுதுணையாக இருந்த ரிஷப் பண்ட் 39 ரன்கள் அடித்துக்கொடுத்தார். இதனால் விராட் கோலியை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் புகழந்து வருகின்றனர்.
கோலியின் சாதனை
இந்நிலையில் இந்த போட்டியில் விராட் கோலி பெரும் சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது டி20 உலகக்கோப்பை தொடரில் அதிக முறை 50 + ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். அவர் இதுவரை 10 முறை டி20 உலகக்கோப்பை தொடரில் மட்டும் அரைசதம் அடித்துள்ளார். இந்த பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயில் 9 அரைசதத்துடன் 2வது இடத்திலும் இலங்கை வீரர் 7 அரைசதத்துடன் 3வது இடத்திலும் உள்ளனர்.
புதிய விஷயம்
இந்த போட்டியில் மற்றும் ஒரு ரெக்கார்ட்டும் தொடர்ந்து வந்துள்ளது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிகளில் தொடர்ந்து விராட் கோலி அசத்தி வருகிறார். அதாவது 2012ம் ஆண்டு போட்டியில் 78*(61), 2014ம் ஆண்டு போட்டியில் 36*(32), 2016ம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் 55*(37), இன்று நடைபெற்ற போட்டியில் 57(49) எடுத்துள்ளார். இதுவரை பாகிஸ்தானுடன் நடைபெற்ற போட்டியில் இந்த முறை தான் கோலி விக்கெட்டாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.