சொதப்பிய இந்திய அணி
முதலில் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர்கள் ஏமாற்றினர். கே.எல்.ராகுல் (3), ரோகித் சர்மா (0), சூர்யகுமார் (11) என அடுத்தடுத்து வெளியேறினார். அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 57 (49) ரன்கள் சேர்த்த நிலையில், ரிஷப் பந்த் 39 (30) அடித்தார். இதனால், இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 151 ரன்கள் மட்டுமே அடித்தது.
முதல் தோல்வி
சவாலான இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் சிறப்பான தொடக்கம் கிடைத்தது. ஓப்பனிங் வீரர்கள் முகமது ரிஸ்வான் 79 (55), பாபர் அசாம் 68 (52) ஆகியோர் அதிரடியாக ரன்களை குவித்தனர். கடைசி வரை இந்திய பவுலர்களால் ஒரு விக்கெட்டை கூட எடுக்க முடியவில்லை. இதனால் 17.5ஆவது ஓவரில் பாகிஸ்தான் அணிக்கு (152/0) 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றுக்கொடுத்தார்கள். இந்திய பௌலர்களால் ஒரு இடத்தில் கூட நெருக்கடியை ஏற்படுத்த முடியவில்லை. வரலாற்றில் முதல் முறையாக உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை பாகிஸ்தான் வென்றது.
விராட் கோலி விளக்கம்
இந்த மோசமான தோல்வி குறித்து பேசிய கேப்டன் விராட் கோலி, நாங்கள் எதனையெல்லாம் செய்ய வேண்டும் என நினைத்து வந்தோமோ அதனை அனைத்தையுமே நாங்கள் சரியாக வெளிப்படுத்தவில்லை. இதற்கு காரணம் பனியின் தாக்கம் தான்.பாகிஸ்தான் அணி தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டனர். 20 ரன்களுக்கு மூன்று விக்கெட்களை இழந்தது பெரும் பின்னடைவாக இருந்தது. அதில் இருந்து மீண்டு வருவது மிக கடினம். தோல்விக்கு இது முக்கிய காரணமாக இருந்தது.
மீண்டு வருவோம்
தொடர்ந்து பேசிய அவர், நாம் மட்டும் இன்னும் 15 முதல் 20 ரன்களை கூடுதலாக சேர்த்திருந்தால் ஓரளவிற்கு இன்னும் பாகிஸ்தானுக்கு சிரமம் கொடுத்திருக்கலாம். பாகிஸ்தான் தரப்பில் பந்துவீச்சும் மிகச்சிறப்பாக இருந்தது. அவரிகளின் பந்துவீச்சில் அதிக ரன்கள் அடிக்க முடியவில்லை. தவறுகள் சரிசெய்யப்படும். இது முதல் போட்டிதான். கடைசி போட்டி கிடையாது, மீண்டு வருவோம் என கோலி கூறினார்.