டாஸ் தோல்வி
போட்டி நடைபெறும் துபாய் மைதானத்தில் டாஸ் வெல்வது மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இந்த மைதானத்தில் பேட்டிங்கிற்கு நன்கு சாதகமாக இருக்கும் என்பதால் டாஸ் வெல்லும் அணி பந்துவீச்சை தேர்வு செய்யும். இங்கு 60% அளவிற்கு 2வது பேட்டிங் செய்யும் அணியே வெற்றியும் பெற்றுள்ளது.
இளம் வீரரின் செயல்பாடு
டாஸை தோல்வியடைந்ததற்கு ஏற்றார் போலவே இந்திய அணி தொடக்கத்திலேயே தடுமாறி வருகிறது. இந்தியாவின் தூணாக பார்க்கப்பட்டது தொடக்க வீரர்கள் கே.எல்.ராகுல் - ரோகித் சர்மா. ஆனால் அவர்கள் இருவரையுமே அடுத்தடுத்த ஒவர்களில் சுருட்டி வெளியே அனுப்பினார் பாகிஸ்தானின் இளம் வேகப்பந்துவீச்சாளர் சாஹீன் அஃப்ரிடி.
அடுத்தடுத்து விக்கெட்கள்
ஆட்டத்தின் முதல் 2 பந்துகளில் ரன் அடிக்காமல் தடுப்பாட்டம் செய்த கே.எல்.ராகுல், 3வது பந்தில் தட்டுத்தடுமாறி சிங்கிள் எடுத்தார். இதன் பின்னர் ஸ்ட்ரைக்கிற்கு வந்த ரோகித் சர்மாவுக்கு, சொல்லி வைத்து வந்தது போல முதல் பந்தையே யார்க்கராக வீசினார் சாஹீன் அஃப்ரிடி. அவர் வீசிய அந்த பந்து மிடில் ஸ்டம்பை பதம் பார்க்க, டக் அவுட்டாகி ரோகித் வெளியேறினார்.
பவர் ப்ளே
இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள்ளாகவே இந்திய அணிக்கு அடுத்த ஓவரிலேயே மற்றொரு அதிர்ச்சி கிடைத்தது. சாஹீன் அஃப்ரிடி வீசிய பந்தில் மற்றொரு தொடக்க வீரரான கே.எல்.ராகுல் 3 ரன்களுக்கு போல்ட் அவுட்டாகி வெளியேறினார். இதனால் இந்திய அணி 6 ரன்களுக்குள் 2 விக்கெட்களை இழந்து தடுமாறியது. பின்னர் வந்த சூர்யகுமார் யாதவ் சிறிது நேரம் அதிரடி காட்டினாலும் பவர் ப்ளே முடிவதற்குள் 11 ரன்களுக்கு நடையை கட்டினார். இதனால் 6 ஓவர்களில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்களே எடுத்தது.