2020 ஐபிஎல்
2020 ஐபிஎல் தொடரை அக்டோபர் மாதம் நடத்த வேண்டி பிசிசிஐ தலைவர் கங்குலி சரியாக காய் நகர்த்தி மற்ற முக்கிய கிரிக்கெட் அணிகளை, அடுத்து நடக்க உள்ள ஐசிசி கூட்டத்தில் இந்தியாவுக்கு சாதகமாக குரல் கொடுக்க வைப்பார் என கூறப்படுகிறது.
கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக கிரிக்கெட் போட்டிகள் ஏதும் நடைபெறவில்லை. அதனால், கிரிக்கெட் வீரர்கள் மற்றும் துறை சார்ந்த ஊழியர்களின் எதிர்காலம் நிலையில்லாமல் உள்ளது. விரைவில் கிரிக்கெட் போட்டிகளை துவக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் முயற்சி செய்து வருகிறது.
நஷ்டத்தில் அணிகள்
பெரிய கிரிக்கெட் அமைப்பான பிசிசிஐ உட்பட அனைத்து அணிகளும் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாததால் கடும் நஷ்டத்தை சந்தித்து உள்ளன. ஐபிஎல் தொடர் நடக்காமல் போனால் பிசிசிஐ-க்கு 4000 கோடி நஷ்டம் ஆகும். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளும் சில நூறு கோடிகள்வரை இப்போதே நஷ்டத்தை சந்தித்துள்ளன.
இந்தியா வந்தால்..
இலங்கை கிரிக்கெட் அமைப்பால் தொலைக்காட்சி உரிமையை கூட விற்க முடியாத நிலை உள்ளது. ஆஸ்திரேலியா, இலங்கை, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட அணிகள் இந்தியாவை தங்கள் நாட்டில் அடுத்து வரும் மாதங்களில் முன்பு திட்டமிட்ட அட்டவணைப் படி போட்டிகளில் ஆட வைத்து விட வேண்டும் என முயற்சி செய்து வருகின்றன. இந்தியா வந்தால் அவர்களின் நிதிச் சிக்கல் பெரும் அளவில் குறையும்.
ஐபிஎல் சிக்கல்
மறுபுறம், இந்திய அணிக்கு இருதரப்பு தொடர்களை விட ஐபிஎல் தொடரை நடத்தாமல் இருப்பது தான் பெரும் சிக்கலாக மாறி வருகிறது. ஐபிஎல் நடக்காமல் போனால் அடுத்த ஆண்டுக்கான வீரர்கள் சம்பளத்தை குறைக்க வேண்டிய நிலை வரும்.
டி20 உலகக்கோப்பை
ஐபிஎல் தொடரை அக்டோபர் மாதம் நடத்த பிசிசிஐ வசம் ஒரு திட்டம் உள்ளது. வீரர்களை இப்போதே தயார்படுத்தினால், கொரோனா வைரஸ் பாதிப்பு கடுமையாக இல்லாமல் இருந்தால், அடுத்த சில மாதங்களில் தெளிவாக திட்டமிட்டு ஐபிஎல் தொடரை நடத்திவிட பிசிசிஐ எண்ணுகிறது. ஆனால், இதே கால கட்டத்தில் நடப்பதாக திட்டமிடப்பட்டுள்ள டி20 உலகக்கோப்பை நடக்காமல் போனால் மட்டுமே ஐபிஎல் நடத்த முடியும்.
தள்ளி வைக்கும் முடிவு
இந்த நிலையில், தான் ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரை தள்ளி வைக்கும் முடிவை எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் பின்னணியில் பிசிசிஐ உள்ளதாக கூறப்படுகிறது. 2020 மற்றும் 2021 அக்டோபரில் இரண்டு டி20 உலகக்கோப்பை தொடர்கள் நடத்த ஐசிசி திட்டமிட்டு இருந்தது.
உலகக்கோப்பை கடினம்
தற்போது உள்ள நிலையில் இருதரப்பு தொடர்களை நடத்தலாம், ஆனால், உலக அளவிலான கிரிக்கெட் தொடரை நடத்துவது கடினம். எனவே, ஆறு மாதம் கழித்து பிப்ரவரியில் உலகக்கோப்பை நடத்தலாம் என ஐசிசி கூறி உள்ளது. அப்படி நடத்தினால் ஆறு மாத இடைவெளியில் இரண்டு உலகக்கோப்பை தொடர்கள் நடக்கும்.
ஐபிஎல் தான் வேண்டும்
அதுமட்டுமின்றி அக்டோபரில் 2020 ஐபிஎல் நடந்து முடிந்து, மீண்டும் 2021 ஐபிஎல் மார்ச் மாதம் நடைபெறும். இப்போது விளம்பரங்கள் அதிக அளவில் கிடைக்காது என்பதால் பணத்தை கொட்டும் ஐபிஎல் தொடரை மட்டுமே நடத்த பிசிசிஐ மற்றும் தொலைக்காட்சி ஆர்வமாக உள்ளன.
ஆதரிக்கப் போகும் அணிகள்
அதனால், 2020 டி20 உலகக்கோப்பை தொடரை 2022க்கு தள்ளி வைக்க உள்ளது ஐசிசி. இந்த முடிவை எடுக்க வைத்ததில் பிசிசிஐ தலைவர் கங்குலியின் பங்கு உள்ளது. அவர் ஐசிசி கூட்டத்தில் இந்த தீர்மானத்தை ஆதரிப்பார் எனவும், இந்தியாவுடன் இருதரப்பு கிரிக்கெட் ஆட ஆவலாக உள்ள அணிகளும் 2 ஆண்டுகள் தள்ளி வைக்கும் முடிவை ஆதரிக்கும் எனவும் கூறப்படுகிறது.