தள்ளி வைக்க வாய்ப்பு
ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் 18ம் தேதி துவங்கி நவம்பர் 15ம் தேதிவரையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள டி20 உலக கோப்பை தொடர் அடுத்த ஆண்டிற்கு தள்ளிவைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா காரணமாக ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டினர் நுழைய செப்டம்பர் மாதம் வரையில் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தொடரை தள்ளி வைப்பது குறித்து ஐசிசி கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.
மிஸ்பா-உல்-ஹக் அறிவுறுத்தல்
இந்நிலையில் டி20 உலக கோப்பை தொடரை தள்ளி வைப்பது குறித்து அவசரகதியில் முடிவெடுக்கக் கூடாது என்று பாகிஸ்தானின் தலைமை தேர்வாளர் மற்றும் தலைமை பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக் கேட்டுக் கொண்டுள்ளார். ஒன்றிரண்டு மாதங்கள் காத்திருந்து இந்த விவகாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
ரசிகர்கள் காத்திருப்பு
கிரிக்கெட்டின் முக்கியமான தொடரான டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து முடிவெடுப்பதற்கு முன்பு தீவிர ஆலோசனை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். 16 அணிகளை கொண்டு ஒரு தொடரை நடத்துவது, அதுவும் தற்போதைய சூழலில் நடத்துவது என்பது எளிதான செயல் அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார். அனைவரும் டி20 உலக கோப்பையை காண காத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
கேளிக்கை அவசியம்
இங்கிலாந்தில் பாகிஸ்தான் அணி, சுற்றுப்பயணம் மேற்கொள்வது என்பது தற்போது சாத்தியமில்லை என்றும் அவர் கூறியுள்ளார். பாதுகாப்பான வழிமுறையில் ஜூலையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள இங்கிலாந்து -பாகிஸ்தான் தொடர் தற்போதைய சூழலில் முயற்சிக்கப்பட வேண்டிய ஒன்று என்று கூறியுள்ள அவர், உலகம் முழுவதும் மக்கள், எந்தவித கேளிக்கையும் இல்லாமல் உள்ளதால், ஒருவித மனநெருக்கடிக்கு ஆளாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.