இந்திய அணி அறிவிப்பு
டி20 உலகக்கோப்பை அணிக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. அந்தவகையில் சமீபத்தில் 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ வெளியிட்டது. இந்த அணியில் பேட்டிங், பவுலிங் துறையில் ரசிகர்கள் எதிர்பார்த்த வீரர்களே ஓரளவிற்கு தேர்வு செய்யப்பட்ட போதும், ஆல்ரவுண்டர்கள் தேர்வில் அதிருப்தியடைந்துள்ளனர்.
ரசிகர்கள் கோபம்
அணியின் முதன்மை ஆல் ரவுண்டராக ஹர்திக் பாண்ட்யா தேர்வு செய்யப்பட்டுள்ளது தான் அதற்கு காரணம். சமீபத்தில் நடைபெற்ற இங்கிலாந்து தொடரில் அதிரடி காட்டிய ஷர்துல் தாக்கூர் ரிசர்வ் வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஃபார்மில் இல்லாத ஹர்திக் முதன்மை தேர்வாகவும், ஷர்துல் ரிசர்வ் வீரராகவும் தேர்வு செய்வதா என ரசிகர்கள் கோபத்தில் உள்ளனர்.
அறுவை சிகிச்சை
கடந்த 2019ம் ஆண்டு காயத்தால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்துகொண்ட ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சில் இருந்து பெரும் அளவில் விலகியுள்ளார். இவர் பந்துவீச முடியாது என்று கூறிய காரணத்தால் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து தொடர்களில் வாய்ப்புகள் குறைந்தன. இலங்கை தொடரில் கடைசி வாய்ப்பு கொடுக்கப்பட்ட போதும், அதில் சிறப்பாக விளையாடவில்லை.
மோசமான பந்துவீச்சு
பாண்ட்யா மீண்டும் பந்துவீச்சு செய்தாலும், அதில் பெரிய அளவிலான தாக்கம் இல்லை. குறைந்த ஓவர்களை வீசினாலும், விக்கெட் எதுவும் எடுக்காமல் 20 ரன்களை வாரி வழங்கி வருகிறார். பேட்டிங்கிலும் சோபிக்க வில்லை. இதன் காரணமாகவே ரசிகர்கள் கோபத்தில் உள்ளனர்.
என்ன காரணம்
இந்நிலையில் ஹர்த்திக்கை அணியில் சேர்த்ததற்கான காரணத்தை தலைமை தேர்வாளர் சேத்தன் ஷர்மா கூறியுள்ளார். அதில் அவர், ஹார்திக் பாண்ட்யா மீண்டும் பந்து வீசுவதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார். அவரது இந்த முடிவினை எங்களிடம் உறுதியாகக் கூறிவிட்டார். இதன் காரணமாகத்தான் அவரை அணியில் சேர்த்துள்ளோம் எனக் கூறினார். இந்திய அணியில் ஜடேஜா, அக்சர் படேல், ஹார்திக் பாண்டியா ஆகிய 3 முக்கிய ஆல்-ரவுண்டர்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஹார்திக் பாண்டியாதான் முதன்மையான ஆல்-ரவுண்டராக இருப்பார். இவர் தொடர்ந்து களமிறங்குவார்" எனத் தெரிவித்தார்.
பேட்டிங்
அமீரக மைதானங்கள் சுழலுக்கு சாதகமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. ஹார்திக் பாண்டியா ஸ்பின்னர்களுக்கு எதிராக சிறப்பாக விளையாடக் கூடியவர். பவர் ஹிட்டர் வேறு. இந்த சிறப்பு காரணங்களுக்காகவும் தான் ஷர்தூலை ரிசர்வ் வீரராகவும், ஹார்திக் பாண்ட்யாவை 15 பேர் கொண்ட பட்டியலில் சேர்த்துள்ளோம் என எனக்கூறியுள்ளார்.