முக்கிய போட்டிகள்
அரசியல் பிரச்னைகளால் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஐசிசி ஏற்பாடு செய்யும் போட்டிகளில் மட்டும் தான் நேரடியாக மோதி வருகின்றன. கடைசியாக சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானிடம் இந்திய அணி தோல்வியடைந்தது. இதற்கு பழிவாங்கும் நோக்கத்துடன் இந்திய அணி உள்ளது. இதே போல உலகக்கோப்பை தொடரில் ஒருமுறை கூட இந்திய அணியை பாகிஸ்தான் வென்றதில்லை. எனவே அதனை மாற்றி அமைக்க பாகிஸ்தானும் முனைப்புடன் உள்ளது.
இந்தியாவுக்குள்ள பிரச்னை
இந்த போட்டியில் இந்திய அணிக்கு பாகிஸ்தானின் வேகப்பந்துவீச்சு தான் பெரும் சவாலாக இருக்கும். டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் கோலி, ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் வலதுகை பேட்ஸ்மேன்கள். பாகிஸ்தானின் இடதுகை வேகப்பந்துவீச்சாளர்களை சமாளிப்பது அவர்களுக்கு மிகச்சிரமமாக இருக்கும். அதற்காக இந்திய வீரர்கள் ஸ்பெஷல் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Recommended Video
நேரடியாக களமிறங்கிய தோனி
இந்நிலையில் பேட்டிங் பயிற்சி கொடுப்பதற்காக நேரடியாக களமிறங்கியுள்ளார் கேப்டன் எம்.எஸ்.தோனி. வலைப்பயிற்சியின் போது இந்திய பேட்ஸ்மேன்களுக்கு எதிராக பந்துவீச்சில் ஈடுபட்டுள்ளார். பாகிஸ்தானின் பந்துவீச்சு எப்படி இருக்கும், அமீரக களத்தில் எப்படி அதனை சமாளிக்க வேண்டும் என அந்த நேரத்திலேயே அவர்களுக்கு அறிவுரையையும் தோனி வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஒரு ஆலோசகராக மட்டுமின்றி தற்போது ஒரு பயிற்சியாளராக தோனி உருவெடுத்து வருவது அனைவராலும் கவனிக்கப்பட்டு வருகிறது.
கட்டாயம்
இந்திய அணி இந்த டி20 உலகக்கோப்பை தொடரை எதிர்கொள்வதில் ஒரு நல்ல விஷயமாக தோனி ஆலோசகராக செயல்பட்டு வருகிறார். தோனியின் தலைமையில் இந்திய அணி மூன்று முறை ஐசிசி கோப்பைகளை வென்றுள்ளது. ஆனால் தற்போதைய கேப்டன் கோலி, ஐசிசி கோப்பையை வென்றுக்கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். எனவே தோனியின் ஆலோசனையில் நிச்சயம் கோலி செயல்பட்டால் நிச்சயம் கோப்பை கிடைக்கும் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.