சிறந்த ஆல்ரவுண்டர்
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக முதன் முறையாக களமிறங்கிய அல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா, தற்போது சர்வதேச அளவில் மிக முக்கிய ஆல்ரவுண்டர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். இந்திய அணியில் வேகப்பந்துவீச்சு மற்றும் பவர் ஹிட்டர் கலந்த ஆல்ரவுண்டர் தேவைப்பட்ட போது, அதனை சரியாக பயன்படுத்தி அவர் உள்ளே நுழைந்தார்.
விமர்சனம்
3 வடிவ கிரிக்கெட்டிலும் இந்திய அணியில் தவிர்க்க முடியாத வீரராக இருந்த ஹர்திக்,கடந்த 2 வருடங்களுக்கு முன்பு முதுகில் ஏற்பட்ட காயத்தினால் அறுவை சிகிச்சை செய்துகொண்டார். அதன்பின்னர் அவருக்கு பெரியளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தற்போது டி20 உலகக்கோப்பை தொடரில் கூட அவர் பந்துவீசினால் மட்டுமே இந்திய அணியின் ப்ளேயிங் 11ல் வாய்ப்பு என்ற நிலை இருந்து வருகிறது.
ஹர்திக்கின் பயணம்
இந்நிலையில் தனது கிரிக்கெட் பயணம் குறித்து ஹர்திக் பாண்ட்யா மனம் திறந்துள்ளார். உலகில் வாழ பணம் மட்டும் தான் மிக முக்கியமான தேவை என்பதை உணர வேண்டும். அதனை நானும், க்ருணாலும் உணர்ந்தோம். ஆனால் பணம் கிடைத்தவுடன் பக்குவமாக நடந்துக்கொள்ளவேண்டும். நாங்கள் என்றுமே பணம் இருப்பதால் ஆணவத்தில் இருந்ததில்லை. என்றுமே எங்கள் கால்கள் தரையில் தான் இருக்கும்.
எனது தொழிலே மாறியிருக்கும்
பணம் எல்லாவற்றையும் மாற்றக்கூடியது. அதற்கு நானே ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. என்னைப் பொறுத்தவரை குடும்பத்தின் மகிழ்ச்சிதான் மிக முக்கியம். கிரிக்கெட்டில் மட்டும் பணம் கிடைக்கவில்லை என்றால் பெட்ரோல் பங்கில் பணிபுரிந்து இருப்பேன். இது விளையாட்டிற்காக கூறவில்லை. பணம் எப்போதும் நம்முடன் வராது என சிலர் கூறுவார்கள். ஆனால் நான் அதனை ஏற்க மாட்டேன். கிராமத்தில் இருந்து ஒரு இளைஞன் வருகிறான் என்றால் கிரிக்கெட்டில் இருந்து பணம் கிடைக்கும், அதன் மூலம் குடும்பத்தை நல்லபடியாக பார்த்துக்கொள்ளலாம் என்று கருதிதான் வருவான், அதனை தன்னுடனே வைத்து அழகுப் பார்ப்பதற்கு இல்லை. எனவே பணம் தான் பல்வேறு மாற்றங்களை கொடுக்கிறது.
ரசிகர்கள் பாராட்டு
எல்லா இடத்திலும் பணம் முக்கியமில்லை என பலரும் கூறுகின்றனர். விளையாட்டில் ஆர்வத்துடன் சேர்ந்து பணமும் கிடைப்பதினால் தான் இளைஞர்கள் வருகிறார்கள். கிரிக்கெட்டில் மட்டும் பணம் இல்லையென்றால் எத்தனை வீரர்கள் விளையாடி இருப்பார்கள் எனத்தெரியவில்லை. எனவே எனக்கு பணம் தான் முக்கியம் எனக்கூறினார். அவர் இப்படி வெளிப்படையாக பேசியிருப்பது ரசிகர்களை கவர்ந்துள்ளது.