தொடக்கமே வெற்றி
முதலாவதாக நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டியை 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் 189 என்ற கடின இலக்கை டாப் ஆர்டர் வீரர்கள் கே.எல்.ராகுல், இஷன் கிஷன், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் சிறப்பாக விளையாடி வெற்றியை பெற்றுக்கொடுத்தனர்.
2வது வெற்றி
இந்நிலையில் இன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியிலும் டாப் ஆர்டர் அசத்தியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய அந்த அணியில் தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. வார்னர் (1), ஃபின்ச் (8), மிட்சல் மார்ஷ் (0) என அடுத்தடுத்து வெளியேறினர். அஸ்வின் 2 விக்கெட்களையும் ஜடேஜா ஒருவிக்கெட்டையும் எடுத்து அசத்தினார்.
மிடில் ஆர்டர் பார்ட்னர்ஷிப்
11 ரன்களுக்குள் 3 விக்கெட்கள் சரிந்து தடுமாறிய ஆஸ்திரேலிய அணியை மேக்ஸ்வெல் - ஸ்மித் ஜோடி தூக்கி நிறுத்தியது. 47 பந்துகளை சந்தித்த ஸ்மித் 57 ரன்களும், மேக்ஸ்வெல் 28 பந்துகளில் 37 ரன்களும் சேர்த்தனர். இதன் பின்னர் வந்த மார்கஸ் ஸ்டோய்னிஸ் 25 பந்துகளில் 41 ரன்களை விளாச 20 ஓவர்களில் அந்த அணி 5 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்தது.
அதிரடி தொடக்கம்
153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் மீண்டும் ஒருமுறை ஓப்பனிங் ஜோடி கலக்கினர். முதல் ஓவர் முதலே ரோகித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் அதிரடி காட்டினர். சிறப்பாக விளையாடிய கே.எல்.ராகுல் 31 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதனால் முதல் விக்கெட்டிற்கு 68 ரன்கள் சேர்ந்தது. மறுமுணையில் தொடர்ந்து அதிரடி காட்டிய ரோகித் சர்மா 41 பந்துகளில் 60 ரன்கள் சேர்த்து ரிட்டையர்ட் அவுட்டானார்.
அபார வெற்றி
இதன் பிறகு வந்த சூர்யகுமார் யாதவ் 27 பந்துகளில் 38 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 8 பந்துகளில் 14 ரன்கள் சேர்க்க, 17.5 ஓவர்களிலேயே இந்திய அணி 153 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த இரண்டு போட்டிகளின் மூலம் இந்திய அணியின் பந்துவீச்சு மற்றும் டாப் ஆர்டர் பேட்டிங் நல்ல ஃபார்மில் இருப்பது நிரூபனம் ஆகியுள்ளது.