முக்கிய ஆட்டம்
இந்த இரு அணிகளும் ஐசிசி போட்டிகளில் மட்டுமே நேருக்கு நேர் போட்டியிடுவதால், ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் கவனமும் இந்த போட்டியின் மீதுதான் திரும்பியுள்ளது. உலகக்கோப்பையில் இதுவரை பாகிஸ்தானால் இந்தியாவை வெல்லவே முடியவில்லை. இதனால் இந்த முறை அதனை மாற்றி அமைக்க பாகிஸ்தானும், தொடர்ந்து வெற்றி பெற இந்திய அணியும் முற்பட்டு வருகிறது.
பவுலிங்
இரு அணிகளின் பேட்டிங்கை போல பந்துவீச்சிலும் மிகப்பெரும் போராட்டம் நாளை நடைபெறவுள்ளது. அதாவது இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவை சமாளிப்பது என்பது மிகவும் கடுமையானது. இதே போல பாகிஸ்தான் அணியில் உள்ள சாஹீன் அஃப்ரிடியை சமாளிக்க வலதுகை வீரர்கள் பெரும் சிரமப்படுகின்றனர். இதனால் இவர்கள் இருவரில் யார் சிறந்த பவுலர் என்ற விவாதம் இணையத்தில் எழுந்துள்ளது.
ஒப்பீடு
இந்நிலையில் இந்த ஒப்பீடு குறித்து பாகிஸ்தான் வீரர் முகமது அமீர் பேசியுள்ளார். அதில் அவர், பும்ரா மற்றும் சாஹீன் அஃப்ரிடியை ஒப்பிடுவது முட்டாள்தனமான ஒன்று. சாஹீன் அஃப்ரிடி அனுபவம் இல்லாத இளம் வீரர். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சிறப்பாக பந்துவீசி பாகிஸ்தானின் சிறந்த பவுலராக வலம் வருகிறார். ஆனால் பும்ரா அப்படியில்லை. அவருக்கு நிறைய அனுபவம் உள்ளது. கடினமான சூழல்களை பார்த்தவர் அவர்.
டாப் பவுலர் பும்ரா
உலகில் தற்போது சிறந்த டி20 பவுலர் என்றால் அது பும்ரா தான். ஆட்டத்தின் புது பந்துகளிலும் சரி, டெத் ஓவர்களிலும் சரி, ஜஸ்பிரித் பும்ரா மிகச்சிறப்பாக விளையாடி வருகிறார். ஆனால் சாஹீன் அஃப்ரிடி புதிய பந்தில் தனிச்சிறப்பாக இருப்பார். எனவே இவர்கள் இருவரையும் ஒப்பிடுவது சரியானதாக இருக்காது என நினைக்கிறேன் எனக்கூறியுள்ளார்.
பயிற்சி ஆட்டம்
இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா, இந்தியாவின் ஒரே ஒரு பயிற்சி போட்டியில் தான் கலந்துக்கொண்டார். அதில் 4 ஓவர்கள் வீசி 26 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். இதே போல் பாகிஸ்தான் வீரர் சாஹீன் அஃப்ரிடி 2 பயிற்சி போட்டிகளிலும் விளையாடிவிட்டார். அதில் ஒவ்வொரு போட்டியிலும் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி 30 ரன்களுக்கும் மேல் தான் அவர் ரன்களை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.