பயிற்சி ஆட்டம்
நேற்று நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் பயிற்சி போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. ஆனால் இந்திய அணியின் ப்ளேயிங் 11ல் மிகப்பெரும் குழப்பத்தையும் இந்த ஆட்டம் ஏற்படுத்தியிருக்கிறது. பந்துவீச்சில் சீனியர் வீரர்களான முகமது ஷமி, புவனேஷ்வர் குமார் ஆகியோரே மோசமாக சொதப்பியுள்ளனர். 4 ஓவர்களை வீசிய புவனேஷ்வர் குமார் 54 ரன்களை விட்டுக்கொடுத்தார். இதே போல ராகுல் சஹாரும் ரன்களை வாரி வழங்கினார்.
மாற்று வீரர்கள்
எனவே புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக ஷர்துல் தாக்கூரும், ராகுல் சஹாருக்கு மாற்றாக வருண் சக்கரவர்த்தியும் சேர்க்கப்பட வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியும் அவர்களின் ஆட்டத்தை உற்றுநோக்கி வருகிறார். எனவே ப்ளேயிங் 11ல் பவுலிங் திட்டம் எப்படி கொண்டுவரப்படும் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
ரவி சாஸ்திரி பதில்
இந்நிலையில் இந்திய அணியின் அணித்தேர்வு எவ்வாறு அமையும் ? என்பது குறித்து பயிற்சியாளர் ரவிசாஸ்திரி பேட்டி அளித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் தேர்வானது பனியின் தாக்கம் எப்படி இருக்கிறதோ ? அதைப்பொறுத்தே அமைந்திருக்கும் எனத்தெரிவித்துள்ளார்.
என்ன காரணம்
இந்திய அணி விளையாடவுள்ள பெரும்பாலான போட்டிகள் இரவு நேரத்தில் மட்டும் தான் நடைபெறுகிறது. இதன் காரணமாக மைதானத்தில் பனியின் தாக்கம் அதிகளவில் இருக்கும். அதனைப் பொறுத்தே அணியில் கூடுதலாக சுழற்பந்து வீச்சாளரை சேர்ப்பதா ? அல்லது வேகப்பந்து வீச்சாளர் உடன் களமிறங்குவதா ? என்பது குறித்து முடிவு செய்யப்படும்.கடந்த இரண்டு மாதங்களாக ஐபிஎல் போட்டிகளில் இந்திய அணி வீரர்கள் விளையாடி இருக்கிறார்கள். எனவே அவர்கள் அதிக அளவில் தயாராக வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. எனினும் அவர்களின் செயல்பாடுகளை காண ஆவலுடன் உள்ளேன்.