கேப்டன்சி விவாதம்
இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் விராட் கோலி, இன்னும் ஃபுல் ஃபிட்னஸுடன் உள்ளார். அவர் எப்படியும் இன்னும் 8 - 9 ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் 3 வடிவ போட்டிகளையும் அவரால் தலைமை தாங்க முடியவில்லை என்றும், தனி தனியாக கேப்டன்கள் நியமிக்கப்பட வேண்டும் என கடந்த சில ஆண்டுகளாகவே ரசிகர்களால் கோரப்பட்டு வருகிறது. இந்த கேள்வி தற்போது மீண்டும் சூடுபிடித்துள்ளது.
சொதப்பல்கள்
இதற்கு காரணம் ஐசிசி தொடர்களில் கோலியின் சொதப்பல்கள் தான். கோலியின் கேப்டன்சியில் இதுவரை 3 ஐசிசி தொடர்களில் இந்திய அணி பங்கேற்றுள்ளது. இதில் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரும் ஒன்றாகும். இந்த 3 தொடர்களிலுமே இந்திய அணி கடைசி வரை சென்று ப்ளே ஆஃப் சுற்றுகளில் வெளியேறி ஏமாற்றம் அளிக்கிறது. அதிலும், கடந்த 2019ம் ஆண்டு உலகக்கோப்பை மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் என 2 முறை நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்து வெளியேறியுள்ளது.
கோலி பதவி விலகல்
இந்நிலையில் இந்திய டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், நான் கடந்த 5 - 6 ஆண்டுகளாக இந்தியாவின் 3 வடிவ கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்து வருகிறேன். பணிச்சுமை கருத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான ஒன்று. எனவே நான் இந்தியாவின் டி20 அணி கேப்டனாக இனியும் செயல்பட விரும்பவில்லை.
ட்விட்டர் பதிவு
வரும் டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின்னர் பதவி விலகவுள்ளேன். அதன் பிறகு இந்தியாவின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிக்கு மட்டும் தொடர்ந்து சிறந்த கேப்டனாக விளங்குவேன் என கோலி குறிப்பிட்டுள்ளார். மேலும் இதுகுறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி, செயல் தலைவர் ஜெய் ஷா ஆகியோருக்கும் தகவல் தெரிவித்துவிட்டதாக கூறியுள்ளார்.
புள்ளி விவரங்கள்
விராட் கோலியின் தலைமையில் இந்திய அணி மிகவும் வெற்றிகரமாகவே செயல்படுகிறது. இதுவரை கோலியின் கீழ் 45 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி 27 வெற்றீகள், 14 தோல்விகளை சந்தித்துள்ளது. வெற்றி சதவீதம் 65.11 ஆக சிறப்பாக உள்ளது. ஒருநாள் போட்டியில் அவரின் வெற்றி சதவீதம் 70 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.