டாஸ் வென்ற கோலி
இந்த மிக முக்கியமான போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்த தொடரில் முதல் முறையாக இந்திய அணி டாஸ் வென்றுள்ளது. போட்டி நடைபெறும் துபாய் மைதானத்தில் டாஸ் வெல்லும் அணிதான் வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக கோலி டாஸை தோற்றார். இதனால் ஆட்டம் முழுக்க முழுக்க எதிரணிக்கு சாதகமாக சென்றது.
கோலியின் மகிழ்ச்சி
இந்நிலையில் இன்று டாஸை இந்தியா வென்றுள்ளது. இதில் சுவாரஸ்ய விஷயம் என்னவென்றால் இன்று விராட் கோலி தனது 33வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரின் பிறந்தநாளன்று இப்படி தொடக்கமே சிறப்பாக இருந்திருப்பது ரசிகர்களுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பேசிய கோலி, என் பிறந்தநாளன்று டாஸ் வென்றுள்ளோம். எனது பிறந்தநாளன்று முதல் போட்டி இருந்திருக்கலாம் என சிரித்துக்கொண்டே கூறினார்.
2 தமிழர்கள்
இந்த போட்டியை பொறுத்தவரை இந்திய அணியில் முக்கிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதாவது பந்துவீச்சில் ஷர்துல் தாக்கூரை நீக்கிவிட்டு மீண்டும் வருண் சக்கரவர்த்தியை கொண்டு வந்துள்ளனர். கடந்த போட்டியில் வருணுக்கு காயம் ஏற்பட்டிருந்ததால் அஸ்வினுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இதனால் இன்று 3 ஸ்பின்னர்கள் மற்றும் 2 வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்குகின்றனர். ஹர்திக் பாண்ட்யா 2 ஓவர்கள் வீசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Recommended Video
பிட்ச் நிலைமை
துபாய் மைதானத்தில் பந்துவீச்சை தேர்வு செய்தது சிறந்த முடிவாகும். ஏனென்றால் இங்கு 2வது இன்னிங்ஸின் போது பனிப்பொழிவு இருக்கும். எனவே முதலில் பந்துவீசி எதிரணியை குறைவான ஸ்கோருக்குள் சுருட்டிவிட்டு, இலக்கை எட்டிப்பிடிப்பதே சிறந்ததாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.