குழப்பம்
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தற்போது பயிற்சி போட்டிகளில் விளையாடி வருகிறது. இங்கிலாந்து அணிக்கு எதிரானபோட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்திலும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. இதில் அனைத்து வீரர்களும் சிறப்பாக விளையாடியுள்ளதால் வரும் 24ஆம் தேதி பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ளும் இந்திய அணி எந்த வீரர்களை களமிறக்கும் என்ற குழப்பம் நீடித்து வருகிறது.
டாப் ஆர்டர்
இந்நிலையில் இந்திய அணியின் ப்ளேயிங் 11 குறித்து முன்னாள் வீரர் விவிஎஸ் லக்ஷ்மணன் பேசியுள்ளார். அதன்படி இந்திய அணியின் ஓப்பனிங் ஜோடியாக ரோகித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் களமிறங்குவார்கள். முதல் விக்கெட்டிற்கு கேப்டன் விராட் கோலியும், 4வது வீரராக சூர்யகுமார் யாதவ் மற்றும் 5-ஆவது வீரராக விக்கெட் கீப்பர் பண்ட்டை தேர்வு செய்துள்ளார். இந்த டாப் ஆர்டரில் இஷான் கிஷானுக்கு திறமையை நிரூபித்தும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
மீண்டும் பாண்ட்யா
ஆல்-ரவுண்டர்களில் ஹர்திக் பாண்டியா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரை லக்ஷ்மணன் தேர்வு செய்துள்ளார். ஹர்திக் பாண்ட்யாவின் பந்துவீச்சு இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கும் பட்சத்தில் பேட்டிங் ஓரளவிற்கு ஃபார்முக்கு திரும்பியுள்ளது. இதே போல ஜடேஜா ஐபிஎல் தொடரின் மூலம் நல்ல ஃபார்மில் இருக்கிறார்.
பந்துவீச்சு தேர்வு
பந்துவீச்சை பொறுத்தவரை சுழற்பந்து வீச்சாளராக ராகுல் சாஹர் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோரைத் தெரிவு செய்துள்ளார். துபாய் மைதானத்தில் பந்து நன்கு நின்று வருவதால் ஸ்பின்னர்களை பெரிதாக பயன்படுத்த விரும்பியுள்ளார். இதே போல வேகபந்துவீச்சில் புவனேஷ்வர்குமார் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். இதனால் சீனியர் வீரர் முகமது ஷமி மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
ப்ளேயிங் 11
ரோஹித் சர்மா, கே. ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஹார்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ராகுல் சாஹர், வருண் சக்ரவர்த்தி, பும்ரா, புவனேஷ்வர் குமார்.