மிரட்டிய இஷான் கிஷான்
இந்த தொடரில் ஹர்திக் பாண்ட்யா, ராகுல் சஹார் ஆகியோர் ஒதுக்கப்படுவார்கள் என எதிரபார்க்கப்பட்ட சூழலில், நல்ல ஃபார்மில் இருக்கும் கே.எல்.ராகுல் ஒதுக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் இஷான் கிஷான் தான். ஐபிஎல் 14ஆவது சீசன் நேற்றைய லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் ஓபனிங் வீரர் இஷான் கிஷன் மிரட்டலாக விளையாடி 32 பந்துகளில் 4 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 84 ரன்கள் குவித்து அசத்தினார்.
டி20 உலகக்கோப்பை
கடந்த சில போட்டிகளில் மோசமாக சொதப்பி வந்த இஷான் கிஷன், நேற்றைய போட்டியில் மெகா கம்பேக் கொடுத்தார். இதனால் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் அவருக்கான இடம் மிக உறுதியாகிவிட்டது. ஆனால் அது ஓப்பனிங் இடமாகவே இருக்கும் என்ற எதிர்பார்க்காத ட்விஸ்ட் ஏற்பட்டுள்ளது.
புன்னகையில் இஷான்
ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டி முடிந்த பிறகு செய்தியாளர்களுக்கு இஷான் கிஷன் பேட்டி கொடுத்தார். அதில், எனது அணிக்காக அதிக ரன்கள் அடித்தது மகிழ்ச்சியளிக்கிறது. அதுமட்டுமல்ல, டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன் நல்ல பார்மில் இருப்பதும் மகிழ்ச்சியளிக்கிறது. நல்ல மனநிலை இருந்ததால் தான் அதிரடி காட்ட முடிந்தது. அதற்கு காரணம் விராட் கோலி, ஜஸ்பரீத் பும்ரா, ஹார்திக் பாண்டியா, க்ருனால் பாண்டியா போன்றவர்கள் தான்.
கோலியின் வாக்குறுதி
நான் ரன்களை குவிக்க திணறிய சமயத்தில் அவர்களின் அறிவுரை உதவியது. அவர்களும் நிறைய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டர். விராட் கோலியுடன் பேசியபோது, டி20 உலகக் கோப்பை தொடரில் ஓப்பனராக களமிறங்க விரும்புகிறேன் என கூறினேன். அதற்கு அவர், உன்னை ஓப்பனராக களமிறக்க தேர்வு செய்துவிட்டோம். அதற்காக தயாராக இரு எனக் கூறினார். உலகக் கோப்பை மிகப்பெரிய தொடர். அதில் அனைத்து இடங்களிலும் களமிறங்கத் தயாராக இருக்கிறேன் என்றும் இஷான் கிஷான் தெரிவித்தார்.