ஆஃப்கானிஸ்தான் அணி
சர்வதேச கிரிக்கெட்டில் ஆஃப்கானிஸ்தான் அணியும் சக்தி வாய்ந்த ஒன்றாக உருவெடுத்து வருகிறது. அந்த அணியின் நட்சத்திர வீரர்கள் ரஷித் கான் மற்றும் முகமது நபி ஆகியோரை ஒப்பந்தம் செய்வதற்கு உள்நாட்டு தொடர்களில் கடும் போட்டி நிலவி வருகிறது. ஆனால் ஆஃப்கானின் இந்த புகழக்கு தாலிபான்கள் அமைப்பு தடையாய் இருக்கவில்லை. கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவதால் எந்தவித பிரச்னையும் இல்லை என்பது போல அறிவித்துவிட்டனர்.
ராஜினாமா
தாலிபான்களின் பிரச்னை ஒருபுறம் இருக்க, மற்றொரு புறம், அந்நாட்டு அணிக்குள்ளேயே கடும் பிரச்னை வெடித்துள்ளது. சமீபத்தில் டி20 உலகக்கோப்பைகான ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டது. ஆனால் அணித்தேர்வின் போது, ஒரு கேப்டனாக தன்னிடம் எந்தவொரு கருத்தையும் கேட்கவில்லை எனக்கூறி ரஷித் கான் கேப்டன் பதவியில் இருந்து விலகினார்.
புது கேப்டன் நியமனம்
இதற்கு எந்தவொரு வருத்தத்தையும், விளக்கத்தையும் தெரிவிக்காத ஆஃப்கான் கிரிக்கெட் வாரியம், உடனடியாக புதிய கேப்டனை நியமித்தது. அந்த அணியின் மற்றொரு நட்சத்திர வீரர் முகமது நபியை புதிய கேப்டனாக அறிவித்தது. இதனால் ரசிகர்கள் அதிருப்தியடைந்தனர்.
புது பிரச்னை
புதிய கேப்டன் நியமித்த போதும், அந்த அணியின் கிரிக்கெட் பாதிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே முதல் முறையாக டெஸ்ட் தொடர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதுவும் ஒரே ஒரு போட்டியாகும். இந்த போட்டி வரும் நவம்பர் 27ம் தேதி தொடங்கவிருந்தது. இந்நிலையில் இந்த் போட்டி ரத்து செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.
காரணம் என்ன?
ஆடவர் கிரிக்கெட்டிற்கு அனுமதி அளித்த தாலிபான்கள் அரசு, தற்போது வரை அந்நாட்டின் மகளிர் கிரிக்கெட்டிற்கு அனுமதி வழங்கவில்லை. அதுகுறித்து எந்தவித அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், விளையாட்டு என்பது அனைவருக்கும் பொதுவானது. எனவே மகளிர் கிரிக்கெட்டிற்கும் அனுமதி கொடுத்தால் மட்டுமே ஆஃப்கான் அணியுடன் விளையாடுவோம். இல்லையென்றால் போட்டியில் பங்கேற்க தயாராக இல்லை எனத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும் இதே காரணத்தினால் டி20 உலகக்கோப்பை தொடரிலும் ஆஃப்கான் அணி வெளியேற்றப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.