டி20 உலக்கோப்பை தொடர்
டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்குவதற்கு இன்னும் 2 மாதங்களே இருக்கும் சூழலில் அதற்காக 15 பேர் கொண்ட வீரர்களின் பட்டியலை ஒவ்வொரு அணியும் வெளியிட்டு வருகின்றன. சமீபத்தில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் தங்களது அணி விவரத்தை வெளியிட்டிருந்தது. இந்த வார இறுதியில் இந்திய அணியும் வீரர்கள் பட்டியலை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தான் ஸ்குவாட்
இந்நிலையில் பாகிஸ்தான் அணி இன்று தனது டி20 உலகக்கோப்பைக்கான அணியை வெளியிட்டது. அதன்படி பாபர் அசாம் அணியின் கேப்டனாக செயல்படவுள்ளார். சதாப் கான் துணைக்கேப்டனாகவும், அசாம் கான், முகமது ரிஸ்வான் ஆகியோர் விக்கெட் கீப்பராகவும் செயல்படவுள்ளனர். அனுபவ வீரர்களான சோயிப் மாலிக் மற்றும் சர்ஃபராஸ் அகமது ஆகியோர் அணியில் சேர்க்கப்படவில்லை.
பாகிஸ்தான் அணி
பாபர் அசாம், சதாப் கான், அசிஃப் அலி, அசாம் கான், ஹாரிஷ் ராவுஃப், இமாத் வசீம், குஷ்தில் ஷா, முகமது ஹஃபீஸ், முகமது ஹஸ்னைன், முகமது நவாஸ், முகமது ரிஸ்வான், முகமது வசீம், சஹீன் ஷா அஃப்ரிடி, சோயிப் மக்சூத்.
அதிர்ச்சி செய்தி
இன்று 12 மணிக்கு பாகிஸ்தான் டி20 உலகக்கோப்பை அணி அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று மதியம் 2 மணிக்கு, அதாவது 2 மணி நேரத்திற்குள் அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் மிஸ்பா உல் அக் மற்றும் பவுலிங் பயிற்சியாளர் வகார் யூனிஸ் ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
முன்கூட்டியே பதவி விலகல்
பாகிஸ்தான் அணியின் இரு பெரும் வீரர்களாக விளங்கிய மிஸ்பா உல் அக் மற்றும் வாகார் ஆகியோர் கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தான் பயிற்சியாளர்களாக நியமிக்கப்பட்டனர். அவர்களின் பதவிக்காலம் முடிய இன்னும் ஒரு ஆண்டு மீதம் உள்ளது. இந்த சூழலில் தான் இருவரும் பதவி விலகியுள்ளனர்.
மிஸ்பா உல் அக் விளக்கம்
இதுகுறித்து பேசிய மிஸ்பா உல் அக், கடந்த 2 வருட காலமாக பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக பணியாற்றியுள்ளேன். இதில் நீண்ட நாட்கள் எனது குடும்பத்தினரை பிரிந்து பயோ பபுளிலேயே இருந்துள்ளேன். எனவே ஓய்வு வேண்டும் என்பதற்காக நான் பதவி விலகுகிறேன். டி20 உலகக்கோப்பை தொடர் வரும் இந்த நேரத்தில் பதவி விலகுவது சரியில்லை தான். இருப்பினும் புதிதாக ஒருவர் பதவியேற்று அணியை வழிநடத்தினால் நன்றாக இருக்கும். கடந்த 2 வருடங்களும் நான் மகிழ்ச்சியாக இருந்தேன். இனி வரும் தொடர்களில் பாகிஸ்தான் அணி சிறப்பாக விளையாட வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.
வகாரின் விளக்கம்
இதே போல் வகாரும் விளக்கம் அளித்துள்ளார். அவர், மிஸ்பா தனது முடிவு குறித்து என்னிடம் பகிர்ந்துக்கொண்டார். நானும் அவரும் ஒன்றாக தான் பணியாற்ற வந்தோம். 2 வருடம் ஒன்றாக செயல்பட்டோம். எனவே பதவி விலகும் போதும் ஒன்றாக விலகிட வேண்டும் என நினைக்கிறேன். கடந்த 16 மாதங்கள் நாங்கள் பயோ பபுள் சூழலிலே இருந்துள்ளோம். இது தான் எங்களுக்கு கடும் அழுத்தத்தை கொடுத்துவிட்டது. ஆனால் வீரர்கள் சோர்ந்துவிடாமல், அடுத்துவரும் தொடர்களில் வெற்றி பெற வேண்டும் எனத்தெரிவித்துள்ளார். டி20 உலகக்கோப்பை தொடருக்கான புதிய பயிற்சியாளர்கள் யார் என்பது குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.