கோலி பதவி விலகல்
3வடிவ கிரிக்கெட் அணிக்கும் கேப்டனாக செயல்பட்டு வரும் விராட் கோலி, டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகியதற்கு பணிச்சுமையை
காரணம் காட்டியிருந்தார். இதனையடுத்து சீனியர் வீரரான ரோகித் சர்மா அடுத்த கேப்டனாக நியமிக்கப்படவுள்ளது உறுதியாகியுள்ளது.
மர்மம்
இந்நிலையில் விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகியதற்கு பின்னால் மிகப்பெரும் பிரச்னை இருந்துள்ளது தெரியவந்துள்ளது. கடந்த 2 வருடங்களாக விராட் கோலியின் ஃபார்ம் கேள்விக்குறியாகியுள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் அவர் கடைசியாக விளையாடிய 53 இன்னிங்ஸில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. ரன் குவிக்க முடியாத அழுத்தமானது அவரின் கேப்டன்சியில் பாதிப்பை ஏற்படுத்தியிருந்ததாக தெரிகிறது.
கடும் அதிருப்தி
அணியில் யாருடைய பேச்சையும் கேட்காமல், தவறான முடிவுகளை எடுப்பது போன்ற செயல்பாடுகளில் கோலி ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அவரின் அழுத்தங்கள் அணி வீரர்களின் தேர்விலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அணி வீரர்கள் பலருக்கும் கோலியின் மீது கடும் அதிருப்தி உள்ளது. ஆனால் அவர்களால் வெளிப்படையாக கூற முடியவில்லை.
சீனியர் வீரர் புகார்
வீரர்கள் மட்டுமின்றி அணியின் பயிற்சியாளர்களுக்கும் கோலி உகந்த மரியாதை கொடுக்கவில்லை எனத்தெரிகிறது. வலைப்பயிற்சியின் போது அவரின் பேட்டிங்கில் ஏதாவது மாற்றங்களை பயிற்சியாளர்கள் கூறினால், அவர் 'என்னை குழப்பாமல் சென்றுவிடுங்கள்' என்று தெரிவித்துள்ளார். இதனால் அணி முழுவதும் கோலி மீது கோபத்தில் இருந்துள்ளது. இதனால் சீனியர் வீரர் ஒருவர் நேரடியாக ஜெய்ஷா ஒருவரிடம் கோலி குறித்து புகார் அளித்துள்ளார். இதன் காரணமாக விராட் கோலி டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, அது குறித்த அறிவிப்பும் வெளியானது.
ஏன் தோனி வரவழைக்கப்பட்டார்
இது ஒருபுறம் இருக்க, டி20 உலகக்கோப்பை தொடரில் தோனியை கொண்டு வந்ததற்கும் கோலியே காரணம். மேலே குறிப்பிட்டவாறு கோலி பேட்டிங் மற்றும் கேப்டன்சி என இரண்டையும் பார்ப்பதால் தவறுகள் ஏற்படுகிறது. எனவே தோனியை அணிக்குள் கொண்டு வந்தால், அணிக்குள் எந்தவித ஆக்ரோஷமும் இல்லாமல் சாந்தமாக இருக்கும். கேப்டன்சி வியூகம் அமைப்பதில் இருந்து கோலி சற்று ஓய்வு பெறுவார். அதே போல பேட்டிங்கிலும் எந்தவித அழுத்தமும் இன்றி விளையாடுவார். இதனால் இந்த டி20 உலகக்கோப்பையில் கோலியின் முழு ஃபார்மை எதிர்பார்க்கலாம் எனக்கூறப்படுகிறது.