சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனிக்கு ரசிகர் கொடுத்த அன்பு பரிசு, காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தோனியின் சொந்த ஊர் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியாக இருந்தாலும், தோனியை தங்களது செல்லப் பிள்ளை போல் தான் தமிழக மக்கள் பாவித்து வருகின்றனர்.
அதற்கு முக்கிய காரணம், ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு தலைமை தாங்கி, நம்ம வீட்டு பிள்ளையாகவே மாறிவிட்டார் தோனி.
தோனியை தமிழக ரசிகர்கள் தல என்று செல்லமாக அழைக்க, அதுவே அவருடைய செல்லப் பெயராக மாறிவிட்டது. ஐபிஎல் தொடருக்கு முன்பே சென்னையில் தான் தனது முதல் டெஸ்ட் போட்டியை தோனி விளையாடினார். தமக்கு ராஞ்சி சொந்த ஊராக இருந்தாலும், தமிழ்நாடு தான் எனது இரண்டாவது தாய் வீடு என்று அவரே பல பேட்டியில் கூறி இருக்கிறார்.
இந்த நிலையில், ஈரோடு மாவட்டம் சென்னிமலையை சேர்ந்த நெசவாளர் அப்புசாமி, தல தோனிக்கு ஒரு அன்பு பரிசை வழங்கியுள்ளார். ஈரோடு ரயில் நிலையத்தில் One station one product திட்டத்தின் கீழ் நெசவு செய்யப்பட்ட துணிகளை விற்பனை செய்து வருகிறார். தோனியின் தீவிர ரசிகரான அப்புசாமி, தோனிக்கு தனது கையால் நெசவு செய்யப்பட்ட ஒரு துணியை தயாரித்துள்ளார்.
அதில் தோனி தனது மகளை கொஞ்சுவது போல் உருவம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பரிசு தோனிக்கு வழங்கப்பட்டுள்ளது. இத்னை பார்த்த தோனி நெகிழ்ச்சி அடைந்து, இந்த பரிசு என்னை மிகவும் கவர்ந்துள்ளதாக கூறியுள்ளார். ரசிகரின் பரிசுடன் தோனி போட்டுள்ள போட்டோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது.