சையது முஷ்டாக் அலி தொடர்
சையது முஷ்டாக் அலி டி20 தொடர் சமீபத்தில் நடந்து முடிந்தது. ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக நடந்த இந்த தொடரை ஐபிஎல் அணிகள் உற்று நோக்கி வந்தன. இந்த தொடரில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு ஏலத்தில் மவுசு இருக்கும் என்பதால் வீரர்களும் தங்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர்.
தமிழக அணி தோல்வி
சையது முஷ்டாக் அலி டி20 தொடரின் இறுதிப் போட்டியில் கர்நாடகா - தமிழ்நாடு அணிகள் மோதின, இந்தப் போட்டியில் கர்நாடகா அணி 1 ரன் வித்தியாசத்தில் தமிழக அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
சிறப்பாக வீசிய சாய்
அனாலும், இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்ட தமிழக சுழற் பந்துவீச்சாளர் சாய் கிஷோர் கட்டுப்பாடுடன் பந்து வீசியதோடு, விக்கெட்களும் வீழ்த்தினார். 12 போட்டிகளில் 20 விக்கெட்கள் வீழ்த்தினார்.
சிறந்த எகானமி
இந்த தொடரில் மிகக் குறைந்த எகானமி ரேட் வைத்திருந்த பந்துவீச்சாளர் என்ற பெயரை பெற்றார் சாய் கிஷோர். டி20 போட்டிகளில் இது போன்ற பந்துவீச்சாளர்களுக்கு தான் அதிக தேவை உள்ளது.
பவர் பிளே பவுலர்
குறிப்பாக பவர் பிளே ஓவர்களில் சாய் கிஷோர் சிறப்பாக செயல்பட்டார். அவர் வீழ்த்திய பெரும்பாலான விக்கெட்கள் பவர் பிளே ஓவர்களில் வீழ்த்தியவைதான். குறைந்த ரன்கள் கொடுத்ததும் பவர் பிளே ஓவர்களில் தான்.
வாஷிங்க்டன் சுந்தர் போன்ற செயல்பாடு
இந்திய அணியில் ஆடி வரும் மற்றொரு தமிழக சுழற் பந்துவீச்சாளர் வாஷிங்க்டன் சுந்தரும் பவர் பிளே ஓவர்களில் சிறப்பாக பந்து வீசி வரும் நிலையில், அதே போன்ற திறனை கொண்டுள்ளார் சாய் கிஷோர்.
கேப்டன் தினேஷ் கார்த்திக்
தமிழ்நாடு அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக், சையது முஷ்டாக் அலி தொடரில் வாஷிங்க்டன் சுந்தர் ஆடிய போதும் தொடர்ந்து, சாய் கிஷோருக்கு பந்து வீச வாய்ப்பு அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டு ஐபிஎல் ஏலம்
கடந்த இரு ஐபிஎல் ஏலங்களில் சாய் கிஷோர் தன் பெயரை பதிவு செய்து இருந்தார், எனினும், எந்த அணியும் அவரை வாங்க முன்வரவில்லை. இந்த நிலையில், இந்த முறை அது மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
போட்டி போடப் போகும் அணிகள்
உள்ளூர் வீரர்களை குறிப்பிட்ட எண்ணிக்கை அளவு வாங்க வேண்டும் என்ற கட்டாயம் இருப்பதால், சாய் கிஷோரை வாங்க இந்த ஐபிஎல் ஏலத்தில் போட்டி நிலவ வாய்ப்புள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முயலுமா?
சையது முஷ்டாக் அலி தொடரில் தமிழக அணிக்கு கேப்டனாக செயல்பட்ட தினேஷ் கார்த்திக் தான், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் என்பதால், அவர் சாய் கிஷோர் குறித்து தன் அணிக்கு தகவல் அளிக்கக் கூடும். அந்த அணி அவரை வாங்க அதிக வாய்ப்பு உள்ளது.