கொரோனா வைரஸ் பாதிப்பு
கொரோனா வைரஸ் 2020ஆம் ஆண்டு துவக்கம் முதல் உலகம் முழுவதும் பரவி வருகிறது. அதனால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர். அதனால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. விளையாட்டுப் போட்டிகள் பலவும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் ஸ்தம்பிப்பு
கிரிக்கெட் போட்டிகளும் ஸ்தம்பித்து உள்ளது. கடைசி சர்வதேச கிரிக்கெட் போட்டி மார்ச் 13 அன்று தான் நடைபெற்றது. ஐபிஎல் தொடரும் கால வரையின்றி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதனால், கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் தங்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர்.
கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா
எனினும், இதுவரை மூன்று கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. சபார் சர்ப்ராஸ் என்ற முன்னாள் பாகிஸ்தான் வீரர், மஜித் ஹக் என்ற ஸ்காட்லாந்து வீரர் மற்றும் சோலோ நிக்வேனி என்ற தென்னாப்பிரிக்க வீரருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருந்தது.
தௌபீக் உமர்
இந்த நிலையில், நான்காவதாக முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் தௌபீக் உமர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை அவரே பாகிஸ்தான் தொலைக்காட்சி ஒன்றில் உறுதி செய்துள்ளார். மேலும், வேண்டுகோளும் வைத்துள்ளார்.
யார் இந்த தௌபீக் உமர்?
தௌபீக் உமர் 2001இல் பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் அறிமுகம் ஆனார். தன் அறிமுகப் போட்டியில் சதம் அடித்து அணியில் நிலையான இடம் பெற்றார். எனினும், 2006 முதல் 2010 வரை அவருக்கு டெஸ்ட் அணியில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
வாய்ப்பு இல்லை
44 டெஸ்ட் போட்டிகளில் ஆடி உள்ள அவர் 2963 ரன்கள் குவித்துள்ளார். அவரது அதிகபட்ச ஸ்கோர் 236 ஆகும். 22 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடி உள்ளார் அவர். 2011இல் அவருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்த போதும் அவரால் தொடர்ந்து அணியில் இடம் பெற முடியவில்லை.
பரிசோதனை
தனக்கு கடந்த சனிக்கிழமை லேசாக காய்ச்சல் இருந்ததாகவும், அதைத் தொடர்ந்து தான் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்து கொண்டதாகவும், அதன் முடிவில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி ஆனதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும், தனக்கு நோய்க்கான அறிகுறிகள் தீவிரமாக இல்லை எனவும் கூறி உள்ளார்.
வேண்டுகோள்
தான் தற்போது தன் வீட்டில் தனிமையில் இருப்பதாகவும் அவர் கூறி உள்ளார். மேலும், தான் விரைவில் குணமாக வேண்டும் என அனைவரும் வேண்டிக் கொள்ளுமாறும் அவர் உருக்கமாக வேண்டுகோள் வைத்தார். ரம்ஜான் பண்டிகை துவங்கி இருக்கும் நிலையில் அவர் இந்த வேண்டுகோளை வைத்தார்.
பாகிஸ்தான் பாதிப்பு
பாகிஸ்தான் நாட்டில் இதுவரை 54,601 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுள்ளனர். அவர்களில் 17,198 பேர் குணமடைந்துள்ளனர். 1,100க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். பாகிஸ்தான் நாட்டில் பொருளாதார பாதிப்புகளும் அதிக அளவில் உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.