இந்தியா - பாகிஸ்தான் போட்டி
டி20 உலகக்கோப்பையில் தொடக்கமே மிகவும் எதிர்பார்ப்புடன் அமையும் வகையில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. வரும் அக்டோபர் 24ம் தேதியன்று இந்திய அணி தனது முதல் போட்டியாக பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. ஐபிஎல் தொடர் மூலம் இந்திய வீரர்கள் அமீரக களத்தை புரிந்து வைத்துள்ளனர். இதே போல பாகிஸ்தானின் மற்றொரு ஹோம் கிரவுண்டாக அமீரகம் பார்க்கப்படுகிறது. இதனால் போட்டி மிக கடுமையானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திரண்ட இந்திய வீரர்கள்
இந்நிலையில் பாகிஸ்தான் அணியில் இருக்கும் ஒரு வீரரின் ஆட்டத்தை காண இந்திய அணி முழுவதும் சென்றிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணி நேற்று இங்கிலாந்துடன் பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டது. இதே மைதானத்தில் தான் பாகிஸ்தான் அணியும், வெஸ்ட் இண்டீஸுடன் பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது. அப்போது அங்குச் சென்ற இந்திய அணி பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, மற்றும் வீரர்கள் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமின் பேட்டிங்கை கண்டு திகைத்தனர்.
யார் அவர்
சர்வதேச அளவில் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவராக பாபர் அசாம் வலம் வந்துக்கொண்டிருக்கிறார். அவர் நேற்றைய போட்டியில் 41 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தினார். இவர் இந்திய அணிக்கு நிச்சயம் தலைவலி கொடுப்பார் என்பதால் அவரின் பலவீனம் என்பதை அறிய ரவி சாஸ்திரி, புவனேஷ்வர் குமார், வருண் சக்கரவர்த்தி, தீபக் சஹார் உள்ளிட்டோர் உற்று நோக்கிக் கொண்டிருந்தனர். இதே போல இங்கிலாந்து வீரர்களும் அங்கு திரண்டனர். பின்னர் குறிப்பு எடுத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறினர்.
இரு அணிகளும் முனைப்பு
ஐசிசி தொடர்களில் இதுவரை பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணியின் கையே அதிக முறை ஓங்கியுள்ளது. ஆனால் கடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தோல்வியை சந்தித்தது. எனவே அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய அணியும், இந்தியாவை வீழ்த்த பாகிஸ்தான் அணியும் கடும் முனைப்பு காட்டி வருகின்றன.