இலங்கை தொடர்
இந்திய அணி வரும் ஜூலை 13ம் தேதி முதல் இலங்கைக்கு எதிரான தொடரில் பங்கேற்கிறது. இந்த அணிக்கு ஷிகர் தவான் கேப்டனாகவும், புவனேஷ்வர் குமார் துணை கேப்டனாகவும் செயல்படவுள்ளனர். ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளராக செயல்படவுள்ளார். ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட 20 வீரர்கள் இந்த தொடரில் விளையாடுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
போட்டி அட்டவணை
ஜூலை 13ம் தேதி முதல் ஒருநாள் போட்டி தொடங்குகிறது. 2 மற்றும் 3வது ஒரு நாள் போட்டி ஜூலை 16, 18 தேதிகளில் நடைபெறுகிறது. மேலும் டி20 போட்டிகள் ஜூலை 21, 23 மற்றும் 25ம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டிகள் அனைத்தும் கொழும்பில் உள்ள ப்ரேமதசா மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதற்காக இந்திய வீரர்கள் அனைவரும் மும்பையில் உள்ள தனியார் ஓட்டலில் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்வதற்காக ஒன்று கூடியுள்ளனர்.
வீரர்களின் கோரிக்கை
இலங்கையுடனான தொடருக்கு முன்னதாக அந்நாட்டின் 'ஏ' அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட இந்திய வீரர்கள் நினைத்துள்ளனர். இதற்காக பிசிசிஐ-யிடம் கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு பிசிசிஐ திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் அதிகமாக இருப்பதால் வீரர்களின் கோரிக்கையை நிராகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மாற்று திட்டம்
இந்திய வீரர்கள் பயிற்சி பெறுவதற்காக இண்ட்ரா ஸ்குவாட் போட்டிகளை பிசிசிஐ ஏற்பாடு செய்துள்ளது. அதாவது சர்வதேச போட்டிகள் நடைபெறும் போது, அதற்கு தயாராகும் விதமாக அணிகள் தங்களுக்குள் இரு அணிகளாக பிரிந்து 'இண்ட்ரா ஸ்குவாட்' விளையாடுவார்கள். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்காக இந்திய சீனியர் அணி தற்போது அப்படி தான் தயாராகி வருகிறது. அந்தவகையில் இந்திய ஏ அணி 1 ஒருநாள் போட்டியும், 2 டி20 போட்டியும் இண்ட்ரா ஸ்குவாட் போட்டியாக விளையாடவுள்ளது.