புது சர்ச்சை
இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய வீரர்களுக்கு அநீதி நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது. எட்ஜ்பாஸ்டன் மைதானத்தின் ப்ளாக் 22 பகுதியில் இந்திய ரசிகர்களை, இங்கிலாந்து ரசிகர்கள் இனவெறியுடன் சண்டைக்கு இழுத்ததாகவும், கெட்ட வார்த்தையில் பேசி கிண்டல் அடித்ததாகவும் புகார் எழுந்துள்ளது. ஆனால் அங்கிருந்த பாதுகாவலர்கள் இந்திய ரசிகர்களை தான் அடக்கியதாகவும் தெரிகிறது.
ரசிகரின் குற்றச்சாட்டு
இதுகுறித்து புகைப்படத்தை வெளியிட்டுள்ள ரசிகர்கர் ஒருவர்,எட்ஜாபாஸ்டனில் எங்களை மிகவும் மோசமான வார்த்தைகளில் பேசினர். இதுகுறித்து பல முறை பாதுகாவலர்களிடம் கூறிய போதும், அவர்கள் எங்களை தான் அமைதியாக அமருங்கள், இல்லையெனில் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதாக, குறிப்பிட்டுள்ளார். இது பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
உடனடி விசாரணை
இந்த சம்பவம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள இங்கிலாந்து வாரியம், இதுபோன்ற ஒரு இனவெறி சம்பவம் நடந்தது வருத்தத்தை கொடுக்கிறது. இதுகுறித்து எட்ஜ்பாஸ்டன் நிர்வாகம் தீவிரமாக விசாரித்து வருகிறது. விரைவில் இதற்கான நடவடிக்கை எடுத்து, பாதுகாப்பான களத்தை உருவாக்குவோம் எனக்கூறியுள்ளது.
மீண்டும் ஏமாற்றம்
போட்டியை பொறுத்தவரையில் முதல் இன்னிங்ஸை போன்றே 2வது இன்னின்ஸிலும் இந்திய அணியின் டாப் ஆர்டர் திணறினர். சட்டீஸ்வர் புஜாரா (66 ரன்கள்) - ரிஷப் பண்ட் 57 ரன்கள் மட்டும் எடுக்க இந்திய அணி 245 ரன்களை எடுத்தது. ஏற்கனவே 132 ரன்கள் என்ற முன்னிலை இருப்பதால் 378 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
தோல்விக்கு அருகில்
இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி தொடக்கம் முதலே அதிரடி காட்டி வருகிறது. அந்த அணியில் ஓப்பனிங் வீரர்கள் அலெக்ஸ் லீஸ் (56 ), ஜாக் க்ராவ்லே (46) என சிறப்பான தொடக்கம் கிடைத்தனர். இதன் பின்னர் வந்த ஜோ ரூட் - பேர்ஸ்டோ ஜோடி 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைக்க, 4ம் நாள் ஆட்டத்தின் முடிவில் இங்கிலாந்து அணி 259 - 3 ரன்களை குவித்துள்ளது. இதனால் இந்திய அணி தோல்வி பாதையை நோக்கி சென்றுள்ளது.