நியூசிலாந்து டெஸ்ட் தொடர்
முன்னணி வீரர்களான ரோகித் சர்மா, பும்ரா, முகமது ஷமி, ரிஷப் பண்ட் உள்ளிட்டோர் இந்த டெஸ்ட் தொடரில் விளையாடவில்லை என்றாலும் அவர்களின் இடத்தை இளம் வீரர்கள் சரியாக நிரப்பினர். ஆனால் சீனியர் வீரர்களான அஜிங்கியா ரகானே மற்றும் சட்டீஸ்வர் புஜாரா ஆகியோருக்கு தான் அபாய மணி ஒளித்துள்ளது. ஸ்ரேயாஸ் ஐயர், மயங்க் அகர்வாலின் சதங்கள் சீனியர்களின் இடத்திற்கு ஆபத்தை உருவாக்கியுள்ளது.
ஒதுக்கப்பட்ட ரகானே
2021ம் ஆண்டு முழுவதுமே மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரகானேவுக்கு துணைக்கேப்டன் பதவி தான் காப்பாற்றி வந்தது. ஆனால் நியூஸி,க்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் அவரை ஓரம்கட்டி அதிரடி காட்டினார் டிராவிட். அவருக்கு மாற்றாக ஸ்ரேயாஸுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இதனால் இனி வரும் நாட்களில் ரகானே மற்றும் புஜாரா ஆகியோருக்கு அணியில் வாய்ப்பு இருக்காது என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அதுவும் அடுத்து வரும் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்திலேயே தெரியவந்துவிடும்.
ராகுல் டிராவிட் பதில்
இந்நிலையில் சீனியர் வீரர்களை ஒதுக்குவது குறித்து பயிற்சியாளர் டிராவிட் பேசியுள்ளார். அதில், இந்திய அணியில் தற்போது பெரிய வீரர் ஒருவர் இல்லையென்றாலும் இளம் வீரர்கள் அதனை சமாளிக்கின்றனர். இது நல்ல விஷயமாக இருந்தாலும், அணித்தேர்வில் எங்களுக்கு தலைவலியை உண்டாக்கும். வரும் காலங்களில் முக்கிய வீரர்களை வெளியே உட்காரவைப்பது போன்ற தலைவலிகள் அதிகம் வரும் என நினைக்கிறேன்.
கடின முடிவுகள்
இளம் வீரர்கள் சிறப்பாக செயல்படுவதால், அடுத்து வரும் டெஸ்ட் தொடர்களில் கடினமான முடிவுகளை எடுப்பதற்கான சூழல்கள் உருவாகியுள்ளன. ஆனால் சரியாக விளையாடாத வீரர்களுக்கு தெளிவான விளக்கத்தை கொடுத்து, அவர்களை சரிபடுத்த ஆலோசனை வழங்குவோம். இதனால் அணிக்குள் பாகுபாடு என்ற பிரச்னை இருக்கவே இருக்காது.
இளம் வீரர்களின் திறமை
நியூசிலாந்து அணிக்கு எதிரான வெற்றி மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால் இந்திய அணி சில விஷயங்களில் பின் தங்கி உள்ளன. அதனை சரிசெய்து நல்ல கம்பேக் கொடுப்போம். மயங்க் அகர்வால், ஸ்ரேயாஸ் ஐயர், சிராஜ் போன்ற வீரர்களுக்கு 2வது டெஸ்ட் போட்டி நல்ல வாய்ப்பாக இருந்தது. அக்ஷர் படேலின் பேட்டிங் திறமையும் நிரூபனம் ஆனது என ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.