தொடக்கமே சரிவு
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் தொடக்கமே சரிவாக இருந்தது. ருத்ராஜ் கெயிக்வாட் - ஷிகர் தவான் ஜோடி 5 ரன்களுக்குள் பிரிந்தனர். கேப்டன் தவான் ஒரு ரன்னை கூட எடுக்காமல் டக் அவுட்டானார். இதன் பின்னர் வந்த வீரர்கள் ஒருவர் கூட அணியின் ஸ்கோரை மீட்கவில்லை. அடுத்தடுத்த ஓவர்களில் இந்திய அணியின் விக்கெட் சீட்டுக்கட்டை போல சரிந்தது.
ஏமாற்றம்
தெளிவாக சொல்லப்போனால் இந்திய அணியின் பேட்டிங்கில் 8 வீரர்கள் ஒற்றை இலக்க எண்ணில் அவுட்டாகி வெளியேறினர். இதில் 3 டக் அவுட்டுகள் ஆகும். அதிகபட்சமாக ருத்ராஜ் கெயிக்வாட் 19 ரன்களும், குல்தீப் 23 ரன்களும்,புவனேஷ்வர் குமார் 16 ரன்களும் எடுத்தனர். இதனால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 81 ரன்களை மட்டுமே எடுத்தது. நீண்ட நாட்களாக சர்வதேச வாய்ப்புகாக காத்திருந்த சஞ்சு சாம்சனுக்கு இந்த போட்டி கடைசி வாய்ப்பாக பார்க்கப்பட்டது. ஏற்கனவே நடைபெற்ற முதல் 2 டி20 போட்டிகளிலும் அவர் பெரிய அளவில் சோபிக்கவில்லை.
தடுமாற்றம்
82 என்ற குறைவான இலக்கை நோக்கி விளையாடி இலங்கை அணி தொடக்கத்தில் சற்று தடுமாறியது. இந்திய வீரர் ராகுல் சஹார் இலங்கையின் டாப் ஆர்டருக்கு அச்சுறுத்தலை கொடுத்தார். அவரின் பந்துவீச்சில் தொடக்க வீரர்கள் அவிஷிங்கா (12), மினோத் பானுகா (18) ரன்களுக்கு வெளியேறினர். இதன் பின்னர் வந்த சதீரா சமரவிக்ரமாவும் 6 ரன்களுக்கு அவுட்டாகி பெவிலியன் சென்றார்.
அசத்தல் வெற்றி
ராகுல் சஹாரின் எடுத்த விக்கெட்களால் இந்திய அணிக்கு நம்பிக்கை பிறந்தது. ஆனால் அந்த அணியின் தனஞ்செய மற்றும் ஹசரங்கா ஆகியோர் முட்டுக்கட்டை போட்டனர். மிகவும் ஸ்லோ ரன்ரேட்டாக இருந்த இலங்கை அணிக்கு திடீரென அதிரடி காட்ட தொடங்கியது இந்த ஜோடி. இதனால் 14.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டிப்பிடித்தது இலங்கை அணி. கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த தனஞ்செயா 23 ரன்களும், ஹசரங்கா 14 ரன்களும் எடுத்தனர் இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை இலங்கை அணி 2 - 1 என்ற கணக்கில் வென்றது.