கைநழுவிய வெற்றி
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் 2 போட்டிகளில் முறையே 66 மற்றும் 51 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றுள்ள இந்திய அணி தொடரை கைநழுவியுள்ளது. இதையடுத்து நாளை நடைபெறவுள்ள 3வது போட்டியில் வெற்றி பெற அணியின் வீரர்கள் தேர்வில் மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என்று முன்னாள் வீரர் தோடா கணேஷ் அறவுறுத்தியுள்ளார்.
மிஸ் செய்யப்படும் ரோகித்
துவக்க வீரர் ரோகித் சர்மா குறைந்த ஓவர்கள் தொடரில் இடம்பெறவில்லை. மாறாக டெஸ்ட் தொடரிலும் முதல் இரண்டு போட்டிகளில் அவர் இடம்பெற மாட்டார் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் ரோகித் இருந்திருந்தால் சிறப்பான துவக்கத்தை இந்தியாவிற்கு கொடுத்திருப்பார் என்றும், அவரை இந்திய அணி மிஸ் செய்வதாகவும் கணேஷ் கூறினார்.
ரோகித் முக்கிய காரணம்
கடந்த 2018-19 தொடரில் 2க்கு 1 என்ற கணக்கில் தொடரை இந்தியா வெற்றி கொண்டதற்கு ரோகித் சர்மா முக்கிய காரணமாக விளங்கியதை கணேஷ் சுட்டிக் காட்டியுள்ளார். மேலும் தற்போதைய ஒருநாள் தொடருக்கு தேவையான வீரர்கள் அணியில் தேர்வு செய்யப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
ஒருநாள் போட்டிகள் வித்தியாசமானது
டி20 தொடரின் அடிப்படையில் பௌலர்களை தேர்ந்தெடுக்கக்கூடாது என்றும் ஒருநாள் போட்டிகள் அதிலிருந்து வித்தியாசமானது என்றும் அவர் கூறினார். கேப்டன் விராட் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரியுடன் ஆலோசனை மேற்கொண்டு, மணீஷ் பாண்டே, நடராஜன் மற்றும் குல்தீப் யாதவ் போன்ற வீரர்களுக்கு அடுத்த போட்டியில் வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.