இங்கிலாந்துக்கு டெஸ்ட் தொடர்
இந்திய அணி அடுத்ததாக இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடர் ஆகஸ்ட். 4ம் தேதி தொடங்கி செப்டம்பர் 14ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்கு இன்னும் 42 நாட்கள் கால இடைவெளி உள்ளதால், இந்திய வீரர்கள் இங்கிலாந்திலேயே தான் தங்கியிருந்து பயிற்சி மேற்கொள்ளவுள்ளனர்.
பயிற்சி
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததற்கு சரியான பயிற்சி இல்லாதது முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது. கொரோனா காரணமாக இண்ட்ரா ஸ்குவாட் போட்டி மட்டுமே நடைபெற்றது. எனவே இங்கிலாந்து தொடரிலும் இந்த பிரச்னை வரக்கூடாது என்பதற்காக பிசிசிஐ முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது. அதாவது இங்கிலாந்து தொடருக்கு 6 வார கால இடைவெளி உள்ளதால் அதற்கு முன்னதாக அந்நாட்டு 'ஏ' அணியுடன் பயிற்சி ஆட்டங்கள் நடத்த இங்கிலாந்து வாரியத்திடம் கோரிக்கை வைத்துள்ளது.
இண்ட்ரா ஸ்குவாட் போட்டி
இந்நிலையில் அதற்கு வாய்ப்புகள் மிக குறைவாகவே உள்ளது. இந்திய அணி வழக்கம் போல் இண்ட்ரா ஸ்குவாட் பயிற்சி போட்டியே ஆடவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணி வீரர்கள் அடுத்த 15 நாட்கள் துர்ஹாம் நகரில் பயிற்சி மேற்கொள்ளவுள்ளனர். அதன் பின்னர் தான் நாட்டிகமில் நடைபெறும் முதல் டெஸ்டுக்கு செல்லவுள்ளது. எனவே துர்ஹாம் நகரிலேயே இந்திய அணிக்கு 2 இண்ட்ரா ஸ்குவாட் பயிற்சி போட்டிகள் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
காரணம் என்ன?
இதுகுறித்து பேசியுள்ள பிசிசிஐ அதிகாரி ஒருவர், இங்கிலாந்தின் கவுண்டி அணியையும், இந்திய அணியையும் ஒரே பபுளுக்கு வைப்பது கடினம். கொரோனா விஷயத்தில் இங்கிலாந்து வாரியம் மிகவும் கண்டிப்பாக உள்ளது. எனவே இந்திய அணி துர்ஹாம் நகரத்தில் இருந்து பபுளில் வைக்கப்பட்டு இண்ட்ரா ஸ்குவாட் பயிற்சி மேற்கொள்ளும் எனத்தெரிவித்துள்ளார்.
விராட் கோலியின் குற்றச்சாட்டு
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி தோல்வி குறித்து விளக்கம் அளித்திருந்த விராட் கோலி, நாங்கள் இங்கிலாந்து வந்தவுடனேயே முதல் தர பயிற்சி ஆட்டம் வேண்டும் என கோரியிருந்தோம். நானும் அதற்கு ஏற்பாடு செய்யப்படும் என எதிர்பார்த்தேன். ஆனால் பயிற்சி ஆட்டங்கள் ஏற்பாடு செய்து தரப்படவில்லை. அதற்கான காரணமும் என்னிடம் தெரிவிக்கப்படவில்லை என பிசிசிஐ-யை குறை கூறியிருந்தார். ஆனால் இதனை எதனையும் கண்டுக்கொள்ளாத பிசிசிஐ மீண்டும் இண்ட்ரா ஸ்குவாட் போட்டியே நடைபெறும் எனக்கூறியுள்ளது.