ஒருநாள் கிரிக்கெட் தொடர்
இன்று மதியம் 2 மணியளவில் லக்னோவில் உள்ள வாஜ்பாய் மைதானத்தில் போட்டி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்றுவிட்டதால், இந்த ஒருநாள் தொடருக்காக புதிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு ஷிகர் தவான் கேப்டனாகவும், சஞ்சு சாம்சன் துணை கேப்டனாகவும் செயல்படவுள்ளனர்.
ப்ளேயிங் 11 கணிப்பு
இந்திய அணியின் ஓப்பனிங்கை பொறுத்தவரையில் கேப்டன் ஷிகர் தவான் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களமிறங்க அதிக வாய்ப்புள்ளது. ருதுராஜ் கெயிக்வாட்டிற்கு வாய்ப்பு இருக்காது எனத் தெரிகிறது. முதல் விக்கெட்டிற்கு ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் 2வது விக்கெட்டிற்கு சஞ்சு சாம்சன் ஆகியோர் களமிறங்கவுள்ளனர். சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பராகவும் செயல்படவுள்ளார்.
அறிமுக வீரர்
ஐபிஎல் தொடரில் கலக்கிய இளம் வீரர் ராஜத் பட்டிதார் இந்த போட்டியின் மூலம் இந்திய அணிக்கு அறிமுகமாவார் என தெரிகிறது. இவருக்கு அடுத்தபடியாக ராகுல் திரிபாதியும் களமிறங்கலாம். ஐபிஎல் தொடரில் மிகச்சிறப்பாக செயல்பட்ட போதும் திரிபாதிக்கு வாய்ப்பே கிடைக்காமல் உள்ளது. எனவே இந்த வாய்ப்பை அவர் நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
பவுலிங் படை
ஆல்ரவுண்டர்களை பொறுத்தவரையில் ஷர்துல் தாக்கூர் மற்று தீபக் சஹார் இருவருமே களம் காணவுள்ளனர். இந்திய அணியில் முன்னணி வீரர்களாக வலம் வந்த இவர்கள் காயம் காரணமாக வெளியேறினர். இதனால் இந்த போட்டி அவர்களுக்கு ஒரு கம்பேக்காக அமையலாம். குறிப்பாக டி20 உலகக்கோப்பை அணியில் பும்ராவுக்கு மாற்றாக இடம்பெற சஹாருக்கு இது முக்கிய வாய்ப்பாகும்.
சிராஜ்-க்கு வாய்ப்பு
அணியின் 3வது வேகப்பந்துவீச்சாளராக முகமது சிராஜ் நிச்சயம் இடம்பெறுவார். டி20 உலகக்கோப்பையில் பும்ராவுக்கு மாற்று வீரர் யார் என்ற குழப்பம் இருந்து வரும் சூழலில் முகமது சிராஜின் பெயர் தான் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. எனவே இதில் அவர் தன்னை நிரூபித்தே ஆக வேண்டும்.
2 ஸ்டார் ஸ்பின்னர்கள்
சுழற்பந்துவீச்சில் இளம் வீரர்கள் குல்தீப் யாதவ் மற்றும் ரவி பிஷ்னாய் களம் காணவுள்ளனர். இவர்கள் இருவருமே இந்திய அணியின் எதிர்காலமாக பார்க்கப்பட்ட சூழலில் திடீரென வாய்ப்பில்லாமல் போனார்கள். எனவே இந்த தொடரில் சிறப்பாக விளையாடினால் 2023ம் ஆண்டு உலகக்கோப்பைக்கான அணியில் இடம்பிடிக்க அதிக வாய்ப்புள்ளது.