தென்னாப்பிரிக்க டி20 தொடர்
டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக இருக்கும் கடைசி போட்டி தென்னாப்பிரிக்க டி20 தொடர் தான் ஆகும். இந்நிலையில் இந்த முக்கியமான தொடரில் ரோகித் சர்மா சில ரிஸ்க்-களை எடுக்கவுள்ளார். அதாவது முன்னணி வீரர்கள் ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, தீபக் ஹூடா ஆகிய 4 பேருக்கு ஓய்வு தரப்பட்டுள்ளது.
பேட்டிங் வரிசை
இந்திய அணியின் டாப் 5 வீரர்களாக ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தினேஷ் கார்த்திக் ஆகியோர் உறுதி செய்யப்பட்டுவிட்டனர். ஆனால் ஹர்திக் பாண்ட்யாவின் இடத்தை யார் நிரப்புவார் என்பது தான் பெரிய கேள்வியாக உள்ளது. ஆசிய கோப்பையில் ஹாங்காங் அணியுடனான போட்டியில் ஹர்த்திக்கிற்கு ஓய்வு தரப்பட்ட போது ரிஷப் பண்ட் சேர்க்கப்பட்டார். ஆனால் அவரை சேர்த்தால் 5 பவுலர்களுடன் தான் களமிறங்க வேண்டியிருக்கும்.
அக்ஷருக்கு கூடுதல் பொறுப்பு
இந்திய அணியின் ஆல்ரவுண்டராக அக்ஷர் பட்டேல் தான் முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆஸ்திரேலிய தொடரில் சிறப்பாக விளையாடியிருந்த அக்ஷர் பட்டேல் பேட்டிங்கிலும் திறம்பட செயல்பட இது சரியான வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. இவருக்கு உறுதுணையாக யுவேந்திர சாஹல் இருக்கிறார்.
பவுலிங் மாற்றம்
வேகப்பந்துவீச்சில் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்ஷல் பட்டேலுக்கு இது முக்கிய போட்டியாக மாறியுள்ளது. புவனேஷ்வர் குமார் ஓய்வுக்கு சென்றுள்ளதால் அர்ஷ்தீப் சிங் மீண்டும் அணிக்குள் எண்ட்ரி தரவுள்ளார். ஏற்கனவே டெத் ஓவர்களில் சிறப்பாக வீசி வரும் அர்ஷ்தீப் சிங், இந்த தொடரின் மூலம் டி20 உலகக்கோப்பையில் தனது இடத்தை உறுதி செய்ய போராடுவார்.
ப்ளேயிங் 11
ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட், அக்ஷர் பட்டேல், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷல் பட்டேல், அர்ஷ்தீப் சிங், யுவேந்திர சாஹல்