முதல் இன்னிங்ஸ்
இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு ஓப்பனிங் சிறப்பாக அமையவில்லை. தொடக்கம் முதலே அதிரடியாக ஆட முயற்சித்த ஷிகர் தவான் 13 ரன்களுக்கு அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். பின்னர் ஜோடி சேர்ந்த அறிமுக வீரர் சஞ்சு சாம்சன் மற்றும் பிரித்வி ஷா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சீரான வேகத்தில் ரன்களை உயர்த்திய இந்த ஜோடி 2வது விக்கெட்டிற்கு 74 ரன்களை சேர்த்தது.
அடுத்தடுத்த விக்கெட்
மிக சிறப்பாக விளையாடி வந்த சஞ்சு சாம்சன் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 46 ரன்களை எடுத்து அவுட்டானார். மறுமுணையில் ஆடி வந்த பிரித்வி ஷா 49 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதனால் இந்திய அணி 118 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து சற்று சரிவை சந்தித்தது. பின்னர் வந்த மணிஷ் பாண்டே - சூர்யகுமார் யாதவ் ஆகியோர் நிதானமாக ரன்களை உயர்த்தி வந்தனர்.
மழையின் குறுக்கீடு
இதனிடையே ஆட்டத்தின் 23வது ஓவரில் மழை குறுக்கிட்டு பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் போட்டி 47 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதன் பிறகு மீண்டும் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் மட்டுமே சிறப்பாக விளையாடி 40 ரன்களை அடித்தார். நட்சத்திர வீரர்கள் மணிஷ் பாண்டே 11 ரன்களுக்கும், நிதிஷ் ராணா 7 ரன்களுக்கும் வெளியேறினர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹர்திக் பாண்ட்யா 19 ரன்களுக்கு அவுட்டாகி மீண்டும் ஏமாற்றினார்.
இலக்கு
டெயில் எண்டர்ஸான கிருஷ்ணப்பா கவுதம் 2, ராகுல் சஹார் 13, நவ்தீப் சைனி 15 அடுத்தடுத்து வெளியேற, 43.1 ஓவர்களில் இந்திய அணி 225 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியின் பவுலிங் படை புதுமுகங்களாக உள்ளதால் எப்படி இலங்கையை சுருட்டப்போகிறார்கள் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.