அதிரடி ஆரம்பம்
இந்த களத்தில் 2வது இன்னிங்ஸின் போதுதான் பனிப்பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல் இன்னிங்ஸின் முதல் ஓவர் முதலே பனிப்பொழிவு இருந்தது. இதன் காரணமாக நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் மார்டின் கப்தில் - டேர்லி மிட்செல் ஆகியோர் பொளந்துக்கட்டினர். அவர்களின் அதிரடியால் 4 ஓவர்களில் அந்த அணி 48 ரன்களை சேர்த்தது. சிறப்பாக விளையாடிய கப்தில் 31 ரன்களும், மிட்செல் 31 ரன்களும் எடுத்து வெளியேறினர்.
அசத்திய ஸ்பின்னர்கள்
இதன் பின்னர் வந்த மார்க் சாப்மேன் மற்றும் க்ளென் பிளிப்ஸ் ஆகியோர் தொடர்ந்து ரன் ரேட்டை உயர்த்திக் கொண்டே இருந்தனர். இதனால் 11 ஓவர்களில் 2 விக்கெட்களை மட்டுமே இழந்து 90 ரன்கள் குவித்திருந்தது. நிச்சயம் ஸ்கோர் 190+ ரன்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அஸ்வின் மற்றும் அக்ஷர் படேல் ஆகியோர் அதற்கு முட்டுக்கட்டை போட்டனர்.
கடைசி 4 ஓவர்கள்
ஸ்பின்னர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் நியூசிலாந்து அணியின் மிடில் ஆர்டர் ஒட்டுமொத்தமாக சரிந்தது. 4 ஓவர்களில் அஸ்வின் 19 ரன்களும் அக்ஷர் பட்டேல் 26 ரன்களும் மட்டுமே விட்டுக்கொடுத்து தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர். இந்த போட்டியில் சர்வதேச அரங்கில் அறிமுகமான ஹர்ஷல் பட்டேல் 4 ஓவர்களில் 25 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களை சாய்த்தார். இதனால் கடைசி 4 ஓவர்களில் நியூசிலாந்து அணிக்கு ஒரே ஒரு சிக்ஸரை தவிர்த்து வேறு எந்த பவுண்டரிகளும் கிடைக்கவில்லை. இறுதியில் 20 ஓவர்களில் நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் சேர்த்தது.
சாதகம்
போட்டி நடைபெறும் ராஞ்சி மைதானத்தில் அதிக பனிப்பொழிவு இருந்து வருகிறது. 2வது இன்னிங்ஸில் இன்னும் அதிகமாக இருக்கும் என்பதால் வெகு விரைவாக இந்த இலக்கை இந்திய அணி எட்டிவிடும் என தெரிகிறது. இன்றை போட்டியில் வெற்றி பெற்றுவிட்டால் 2 - 0 என தொடரையும் கைப்பற்றிவிடும்.