இறுதிப்போட்டி
கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதற்காக 24 பேர் கொண்ட இந்திய அணி கடந்த ஜூன் 2ம் தேதி இங்கிலாந்து சென்றது. புறப்படுவதற்கு முன்னதாக மும்பையில் உள்ள தனியார் ஹோட்டலில் 14 நாட்கள் குவாரண்டைனில் இருந்த இந்திய வீரர்கள் இங்கிலாந்து சென்ற பிறகும் குவாரண்டைனில் இருந்து வருகின்றனர்.
குவாரண்டைன் விதிமுறைகள்
இது மிக முக்கியமான போட்டி என்பதால் 10 நாள் குவாரண்டைனில் 3 நாட்கள் மட்டும் கடும் குவாரண்டைனில் இருந்துவிட்டு 4வது நாளில் இருந்து பயிற்சியை மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வீரர்கள் தனி தனியாக மைதானத்தில் பயிற்சியை மேற்கொண்டு வந்தனர்.
குழு பயிற்சி
இந்நிலையில் இந்திய அணி வீரர்கள் குழுவாக சேர்ந்து பயிற்சியை தொடங்கிவிட்டனர். இதுகுறித்து ஐசிசி வெளியிட்டுள்ள வீடியோவில், இந்திய அணி கேப்டன், ரிஷப் பண்ட், ரோகித் சர்மா, முகமது சிராஜ் என நட்சத்திர வீரர்கள் அனைவரும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக கேப்டன் விராட் கோலி தனது கிளாசிக் ஆட்டத்திற்கு தயாராகிவிட்டார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
தீவிர பயிற்சி
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்காக நியூசிலாந்து முன்கூட்டியே இங்கிலாந்து சென்றடைந்து, அங்கு அந்நாட்டுடன் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஆனால் இந்திய அணிக்கு வலைப்பயிற்சி மட்டுமே உள்ளது. எனவே இதனை சரியாக பயன்படுத்திக்கொள்ள தீவிரமாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.