இந்தியாவின் நம்பிக்கை
கடந்த 1989ல் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின் மூலம் தனது சர்வதேச போட்டியை துவக்கினார் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர். இந்தியாவுக்காக 664 போட்டிகளில் விளையாடியுள்ள சச்சின் டெண்டுல்கர், 34,000 ரன்களை குவித்துள்ளார். இவரை போட்டிகளில் அவுட் ஆக்குவது என்பது எதிரணி பௌலர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தது.
சச்சின் குறித்து மஞ்ச்ரேகர்
இதனிடையே, 90களில் இந்திய அணி முழுமையாக சச்சின் டெண்டுல்கரையே நம்பியிருந்ததாக முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேகர் தெரிவித்துள்ளார். கடந்த 1989ல் தன்னுடைய கிரிக்கெட் கேரியரை துவக்கிய சச்சின், ஒரு வருடத்திற்குள்ளாகவே நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் 80 ரன்களை குவித்தார். தொடர்ந்து தன்னுடைய நிலையான ஆட்டத்தால் 96களில் இந்திய அணி அவரை மட்டுமே நம்பிக்கொண்டிருக்கும் சூழலை உருவாக்கினார்.
சிறப்பான ஆட்டம்
தன்னுடைய 17 வயதில் தன்னுடைய ஆட்டத்தின்மூலம் உலகமே தன்னை அதிசயத்துடன் திரும்பி பார்க்கும் சூழலை சச்சின் டெண்டுல்கர் உருவாக்கினார். அதுவரை சுனில் கவாஸ்கர் உள்ளிட்ட பல வீரர்களும் பாதுகாப்பு வழிமுறையில் ஆட்டத்தை ஆடிவந்தனர். ஆனால் சச்சின் டெண்டுல்கர் மட்டுமே சிறந்த பௌலரின் கையால் போடப்படும் சிறந்த பந்தையும் அடித்து ஆடுவார் என்றும் மஞ்ச்ரேகர் தெரிவித்துள்ளார்.
காதில் போட்டுக் கொள்ளாதீர்கள்
இதேபோல வீரர்கள், வர்ணனையாளர்களின் கமெண்டுகளை காதில் போட்டுக் கொள்ளாமல் தங்களது ஆட்டத்தில் கவனத்தை செலுத்தி ஆட வேண்டும என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். தங்களை போன்றவர்களின் வர்ணனைகளை, தங்களது ஆட்டத்திற்கு கிடைத்த கமெண்ட்டுகளாகவே கருதி அதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். வீரர்களின் ஆட்டத்தை வைத்தே ரசிகர்கள் அவர்களை மதிப்பிடுவார்கள் என்றும் வர்ணனையார்களின் கருத்துக்களை கொண்டு அல்ல என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.