வீட்டிற்குள் முடங்கிய வீரர்கள்
கொரோனா வைரஸ் காரணமாக ஊடரங்கு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, வீரர்கள் வீட்டிற்குள் முடங்கியுள்ளனர். இந்நிலையில், மீண்டும் கிரிக்கெட் போட்டிகளை, பயிற்சிகளை துவக்க பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது.
வீரர்களின் முக்கிய செயல் விளையாட்டு
இந்நிலையில், கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதற்கு முன்னதாக இந்திய அணி வீரர்களுக்கு 6 முதல் 8 வாரங்களுக்கு கடுமையான பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும் என்று பௌலிங் கோச் பாரத் அருண் தெரிவித்துள்ளார். பந்தய குதிரையின் முக்கியமான பணி ஓடுவது. அதைவிட்டு அதை ஒரே இடத்தில் கட்டி வைக்க முடியாது. அதேபோலத்தான் விளையாட்டு வீரர்களையும் ஒரே இடத்தில் முடக்க முடியாது என்றும் அவர்களது தலைமையான செயல் விளையாட்டு மட்டுமே என்றும் அவர் கூறியுள்ளார்.
பயிற்சிகள் அவசியம்
விளையாட்டு வீரர்கள் ஒரே இடத்தில் அடைந்து கிடப்பது என்பது மிகுந்த சாபக்கேடான விஷயம். ஆனால் நாட்டில் அனைவரும் முடங்கியுள்ளதால் வீரர்கள் எதிர்கொண்டுள்ள இந்த முடக்கம் இந்த நேரத்தில் தவிர்க்க முடியாதது. கிரிக்கெட் போட்டிகள் துவங்குவதற்கு முன்னதாக அவர்களுக்கு ரன்னிங், வலிமை, யோ-யோ, சகிப்புத்தன்மை போன்றவற்றில் தீவிர பயிற்சி அளிக்கப்படுவது முக்கியம் என்றும் அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டள்ளதாகவும் அருண் மேலும் கூறினார்.
வீரர்களுக்கு முக்கிய பயிற்சிகள்
சர்வதேச கிரிக்கெட்டை துவங்குவதற்கு முன்பு வீரர்களுக்கு இந்த நான்கு பயிற்சிகள் கண்டிப்பாக அளிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ள அவர், மேலும் தொடர் பயிற்சிகள், அதிகமான உள்ளூர் போட்டிகள் போன்றவையும் வீரர்களுக்கு மிகவும் முக்கியமானவை என்றும் மேலும் கூறியுள்ளார். ஒவ்வொரு நாட்டு அணியும் இவற்றை கருத்தில் கொண்டு செயல்பட தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.