லண்டன்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கேப்டன் மைக்கேல் கிளார்க் ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்டுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய ஒருநாள் கிரிக்கெட் அணி கேப்டனாக செயல்பட்ட மைக்கேல் கிளார்க் சமீபத்தில் முடிந்த உலக கோப்பை இறுதி போட்டி வெற்றியுடன், ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
இந்நிலையில், தற்போது டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவித்துள்ளார் 34 வயதான கிளார்க். 2004ல் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அடியெடுத்து வைத்த கிளார்க் இதுவரை 114 டெஸ்ட் போட்டிகளில் ஆடி மொத்தம் 8632 ரன்களை குவித்துள்ளார். இதில் 28 சதங்கள், 27 அரை சதங்கள் அடங்கும். பேட்டிங் சராசரி 49.33.
இந்நிலையில், இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து நடப்பு ஆஷஸ் தொடரில் ஆடும் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணிக்கு கிளார்க் கேப்டனாக செயல்பட்டார். 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் 4வது டெஸ்ட் போட்டி இன்று முடிவடைந்தது. இன்னிங்ஸ் மற்றும் 78 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா தோற்றது. தொடரையும் பறி கொடுத்தது.
இதையடுத்து நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்ச்சியில், ஆஷஸ் டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும் தான் ஓய்வு பெறப்போவதாக கண்ணீருடன் மைக்கேல் கிளார்க் அறிவித்தார். இதைக் கேட்ட மைதானத்தில் குழுமியிருந்த ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ரசிகர்கள், இருக்கையை விட்டு எழுந்து கைதட்டி மரியாதை கொடுத்தனர்.
மைக்கேல் கிளார்க் நடப்பு ஆஷஸ் தொடரின் 5வது போட்டியில் ஆடுகிறார். போட்டி வரும் 20ம் தேதி தொடங்குகிறது.