ஹைதராபாத்: உலக கோப்பையில், இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான அரையிறுதி போட்டியை மாணவர்கள் கண்டுகளிக்க வசதியாக, தெலங்கானா மாநில பள்ளி, கல்லூரிகளுக்கு, முதல்வர் சந்திரசேகர ராவ் விடுமுறை அறிவித்துள்ளார். அவரது இந்த அறிவிப்பு தெலங்கானா ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
உலக கோப்பை அரையிறுதி போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா-ஆஸ்திரேலியா இடையே இன்று சிட்னியில், காலை 9 மணிக்கு போட்டி தொடங்கியுள்ளதால் ஏராளமானோர் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி விடுமுறை எடுத்து டிவி முன்பு அமர்ந்து விட்டனர்.
கிரிக்கெட் ரசிகரான தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ், மாணவர்களே நீங்க லீவ் போட வேண்டாம்... நாங்களே லீவ் தருகிறோம் என்று அறிவித்து அவர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளார். இதுகுறித்த சுற்றறிக்கை நேற்றிரவே வெளியானதான தகவல்கள் தெரிவிக்கின்றன.
நம்ம முதலாளி நல்ல முதலாளி.. என்று பாடாத குறையாக உற்சாகமடைந்துள்ள தெலங்கானா கிரிக்கெட் ரசிகர்கள்... சிப்ஸ், பிஸ்கட் சகிதமாக டிவி முன்பு அமர்ந்து போட்டியை ரசித்து வருகின்றனராம்.