2008 முதல் போட்டிகள் இல்லை
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போட்டி என்றால் மிகுந்த பரபரப்புடன் காணப்படும். இந்த போட்டிகளை காண்பதற்காகவே உலக அளவில் அதிகமான ரசிகர்கள் காத்திருந்த காலம் ஒன்று உண்டு. ஆனால் மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு கடந்த 2008 முதல் இருதரப்பிலும் டெஸ்ட் போட்டிகள் நடத்தப்படவில்லை.
பயங்கரமான சூழல் நிலவுகிறது
ஆயினும் கடந்த 2012ல் இந்தியாவில் சிறிய அளவிலான சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் அணியினர் ஒருநாள் தொடரில் பங்கேற்று ஆடினர். இந்நிலையில், இந்தியா -பாகிஸ்தான் இடையில் போட்டிகளை நடத்த இயலாத அளவில் தற்போது பயங்கரமான சூழல் நிலவுவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
உகந்த சூழல் இல்லை
ஸ்கை ஸ்போர்ட்ஸ் டாகுமெண்டரிக்காக பேசிய முன்னாள் பாகிஸ்தான் கேப்டனும் தற்போதைய பாகிஸ்தான் பிரதமருமான இம்ரான் கான், இருதரப்பிலும் கிரிக்கெட் போட்டிகள் குறித்து தான் யோசித்ததாகவும், ஆனால் தற்போது அதற்கு உகந்த சூழல் காணப்படவில்லை என்றும் மேலும் கூறினார்.
1979ல் சிறப்பாக இருந்தது
கடந்த 1979 மற்றும் 1987 ஆகிய ஆண்டுகளில் தன்னுடைய கேப்டன்ஷிப்பின் கீழ் இந்தியாவில் பாகிஸ்தான் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டதாகவும், 1979ல் நிலைமை சிறப்பாக இருந்ததாகவும், ஆனால் 1987ல் இருதரப்பிலும் டென்ஷன் இருந்ததாகவும் அது கிரிக்கெட் போட்டிகளிலும் பிரதிபலித்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஆஷஸ் தொடரை காட்டிலும் சிறந்தது
ஆஷஸ் தொடரை காட்டிலும் இந்தியா -பாகிஸ்தான் இடையிலான தொடர் மிகவும் பெரியது என்றும் அவர் மேலும் கூறினார். இந்த தொடர்களில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் ஹீரோக்களை போல பார்க்கப்படுவதாகவும், சொதப்பினால் நெருக்கடிகளை சந்திக்க நேரும் என்றும் அவர் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.