இறுதிப் போட்டி
பாகிஸ்தான் நாட்டில் பாக்துன்க்வா மாகாணத்தில் உள்ள கைபர் பகுதியில் உள்ளூர் கிரிக்கெட் போட்டி ஒன்று நடந்தது. அது ஏஎம்என் எனும் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி. அந்தப் போட்டிக்கு பெரும் அளவில் கூட்டம் கூடி இருந்தது.
தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு
கொரோனா வைரஸ் பாதிப்பு என்பதை எல்லாம் யாரும் பொருட்படுத்தவில்லை. பெரும் கூட்டத்துக்கு நடுவே இறுதிப் போட்டி துவங்கியது. போட்டி துவங்கிய சில நிமிடங்களில் அருகாமையில் உள்ள மலையில் இருந்து தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
அனைவரும் ஓடினர்
இந்த கிரிக்கெட் போட்டியை காண வந்த ரசிகர்கள், பத்திரிக்கையாளர்கள், போட்டியில் பங்கேற்ற வீரர்கள் என அனைவரும் உயிரை கையில் பிடித்துக் கொண்டு ஓடினர். நல்ல வேளையாக உயிரழப்பு ஏற்படவில்லை. அனைவரும் தப்பினர். அந்தப் போட்டி அத்துடன் கை விடப்பட்டது.
பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு சிக்கல்
இந்த சம்பவத்தால் பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு சிக்கல் எழலாம் என கருதப்படுகிறது. 2009ஆம் ஆண்டு பாகிஸ்தான் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்த இலங்கை அணியை குறி வைத்து தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
கிரிக்கெட் உலகில் அச்சம்
அப்போது அதிர்ஷ்டவசமாக இலங்கை கிரிக்கெட் வீரர்கள் உயிர் தப்பினர். அப்போது முதல் பாகிஸ்தான் என்றாலே கிரிக்கெட் உலகில் அச்சம் ஏற்பட்டது. அடுத்த பத்து ஆண்டுகளுக்கு கிரிக்கெட் அணிகள் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொள்ள அஞ்சி வந்தனர்.
மீண்டும் இலங்கை
பாகிஸ்தான் அணி ஐக்கிய அரபு அமீரகத்தை சொந்த நாடாக பாவித்து கிரிக்கெட் ஆடி வந்தது. கடந்த ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு போராடி மீண்டும் இலங்கை அணியை தங்கள் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள வைத்தது.
கிரிக்கெட் போர்டு முடிவு
அதைத் தொடர்ந்து வங்கதேச அணியும் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அப்போது முதல் இனி பாகிஸ்தான் அணி பொதுவான நாட்டில் கிரிக்கெட் போட்டிகளில் ஆடாது. அனைத்து அணிகளும் பாகிஸ்தான் நாட்டிற்கு தான் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டும் என கூறி வருகிறது அந்த நாட்டின் கிரிக்கெட் போர்டு.
அச்சுறுத்தல்
இப்படிப்பட்ட சூழலில் தான் உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தி அதிர வைத்துள்ளனர். இந்த சம்பவம் அடுத்து பாகிஸ்தான் வரும் அணிகளை அச்சுறுத்தக் கூடும். இது குறித்து விரைவில் விசாரணை நடத்தப்படும் என அந்தப் பகுதியின் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.