கொழும்பு: இலங்கை சுழற்பந்து வீச்சாளர் தரிந்து குஷால் பந்தை எறிவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் அவர் பந்து வீசிய விதம் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
இலங்கை ஆப்-ஸ்பின்னரான தரிந்து குஷால், சமீபத்தில் நிறைவடைந்த இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடினார். இந்த போட்டிகளின்போது, குஷாலின் பந்து வீச்சு சர்ச்சைக்குள்ளதாக இருந்ததாக ஐசிசி அமைப்பு தெரிவித்துள்ளது.
போட்டி அதிகாரிகள் ஐசிசிக்கு புகார் அளித்துள்ளதாக ஐசிசி இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே, அடுத்த 14 நாட்களுக்குள் குஷால் தனது பந்து வீச்சை சோதனைக்கு உட்படுத்த வேண்டியது அவசியம். சோதனை முடிவு வெளியாகும்வரை குஷால் போட்டிகளில் பங்கேற்க எந்த தடையும் கிடையாது.
இந்தியாவுக்கு எதிரான 3 டெஸ்ட்டுகளில் மொத்தம் 13 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் குஷால். இதில் காலேவில் நடந்த முதல் டெஸ்டில் இலங்கை வெற்றிபெற இவர் வீழ்த்திய 8 விக்கெட்டுகள் உதவிகரமாக இருந்தன.