ஆஸ்திரேலியா அபார வெற்றி
ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டி தொடர்கள் திட்டமிடப்பட்ட நிலையில் ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் முடிவடைந்துள்ளன. டெஸ்ட் போட்டியின் பகலிரவு போட்டி நடந்து முடிந்துள்ளது. இதில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா இந்திய அணியை வெற்றி கொண்டுள்ளது.
நினைவுகளை பகிர்ந்த சச்சின்
இந்நிலையில் கடந்த 1991ல் 5 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடருக்காக இந்தியா ஆஸ்திரேலியாவில் மேற்கொண்ட சுற்றுப்பயணம் குறித்த நினைவலைகளை முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது யூடியூப் சேனலில் பகிர்ந்து கொண்டார். கடந்த 1989ல் தன்னுடைய முதல் சர்வதேச போட்டியில் விளையாடிய சச்சின் டெண்டுல்கர், 1991ல் இந்த சுற்றுப்பயணத்தில் பங்கேற்றார்.
கரிசனம் கிடைக்காது என அறிந்திருந்தேன்
இந்த தொடரின் போது தான் இளவயதாக இருந்த நிலையில், வயது குறித்தெல்லாம் ஆஸ்திரேலிய பௌலர்கள் எந்த கரிசனமும் காட்ட மாட்டார்கள் என்பதை தான் அறிந்திருந்ததாக சச்சின் குறிப்பிட்டுள்ளார். தன்னை அவுட் ஆக்குவதற்கான எல்லா முயற்சிகளையும் அவர்கள் மேற்கொள்வார்கள் என்பதை உணர்ந்து தான் செயல்பட்டதாகவும் சச்சின் கூறியுள்ளார்.
முழுமையாக ஆக்கியது
இந்த தொடரில் இரண்டு சதங்களை சச்சின் டெண்டுல்கர் அடித்த நிலையில், இந்த தொடர் தன்னை முழுமையான கிரிக்கெட் வீரரான உருவாக்கியதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் தொழில்நுட்ப ரீதியாக மட்டுமின்றி மனரீதியாகவும் பெரிய போட்டிகளை எதிர்கொள்வது குறித்து தனக்கு அந்த தொடர் அதிகமாக கற்றுக் கொடுத்ததாகவும் தெரிவித்தார்.
தடுத்து ஆட வேண்டும்
ஸ்டீப் பௌன்ஸ் மற்றும் பேஸ் குறித்து அதிகமாக பேசப்படுவதை சுட்டிக் காட்டிய சச்சின், அதிகமாக ரன் அடிக்கும் பாசிட்டிவ் மனநிலையுடன் பேட்ஸ்மேன்கள் தடுத்து ஆடினால், ரன் அடிப்பதற்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறினார்.