7ம் தேதி 3வது டெஸ்ட்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் டெஸ்ட் போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது. வரும் 7ம் தேதி 3வது டெஸ்ட் போட்டி இரு அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ளது. இதையொட்டி இரு அணிகளும் மெல்போர்னில் பயோ பபள் விதிமுறைகளுக்கு உட்பட்டு தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன.
விதிமுறை மீறல் என குற்றச்சாட்டு
இதனிடையே, ரோகித் சர்மா, ரிஷப் பந்த், சுப்மன் கில், நவ்தீப் சைனி மற்றும் பிரித்வி ஷா ஆகியோர் பாதுகாப்பு நெறிமுறைகளை மீறி மைதானத்திற்கு அருகில் உள்ள உணவகத்திற்கு சென்றதாகவும் அங்கு ரசிகர் ஒருவருடன் செல்பி எடுத்ததாகவும் அவரை பந்த் கட்டியணைத்ததாகவும் வெளியான தகவலையடுத்து அவர்கள் ஐவரையும் பிசிசிஐ தனிமைப்படுத்தியுள்ளது.
விசாரணைக்கு தயார் என அறிவிப்பு
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பிசிசிஐ விசாரணை மேற்கொண்டுள்ளது. இதையடுத்து இந்திய வீரர்கள் விதிமுறை மீறலில் ஈடுபடவில்லை என்றும் எந்த நேரத்திலும் கொரோனா பரிசோதனைக்கும் இதுகுறித்த விசாரணைக்கும் தயாராக உள்ளதாகவுசம் பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது.
மழைக்காக ஒதுங்கியுள்ளனர்
மேலும் உணவகத்தின் வெளியில்இருந்த ஐந்து வீரர்களும் மழை பெய்ததன் காரணமாகவே உள்ளே சென்றுள்ளதாகவும் பிசிசிஐ குறிப்பிட்டுள்ளது. ஆயினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரோகித் சர்மா உள்ளிட்டவர்கள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தனியாக பயிற்சி மேற்கொள்ளவுள்ளதாகவும் தனியாகவே பயணம் மேற்கொள்வார்கள் என்றும் தெரிவித்துள்ளது.