மும்பை : கொரோனா வைரஸ் பரவலால் சர்வதேச அளவில் மட்டுமின்றி இந்தியாவிலும் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. நாடுமுழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மக்களின் இயல்புவாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சச்சின் டெண்டுல்கர், சுரேஷ் ரெய்னா, பிவி சிந்து உள்ளிட்ட விளையாட்டு பிரபலங்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் இந்த நெருக்கடியான நேரத்தில் நன்கொடை அளித்து மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு கைகொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் சங்கம் பிசிசிஐ பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.51 கோடி ரூபாய் நன்கொடை அறிவித்துள்ளது.
உலக அளவில் மக்களை அசாதாரணமான நிலைக்கு தள்ளியுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பால், கடந்த சில வாரங்களில் உலகமே ஸ்தம்பித்துள்ளது. இதையடுத்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் உலக நாடுகள் ஈடுபட்டுள்ளன. ஆனால், என்னை தற்போதைக்கு ஒன்றும் செய்ய முடியாது என்று தன்னுடைய பரவலை அதிகப்படுத்தி வருகிறது கொரோனா.
சர்வதேச அளவில் பல்வேறு நிகழ்வுகள் குறிப்பாக விளையாட்டு நிகழ்வுகள் முடங்கியுள்ள இந்த சூழலில், கொரோனா பாதிப்பிற்கு கைகொடுக்கும்வகையில், பல்வேறு துறைகளை சேர்ந்த குறிப்பாக விளையாட்டுத்துறையினர் அதிகளவில் நன்கொடைகளை அளித்து வருகின்றனர்.
இந்தியாவிலும் முன்னாள் ஆட்டக்காரர் சச்சின் டெண்டுல்கர் 50 லட்சம் ரூபாய் நன்கொடையை அறிவித்துள்ளார். இதேபோல இந்திய ஆட்டக்காரர் சுரேஷ் ரெய்னா 52 லட்சம் ரூபாய் நன்கொடையை அறிவித்துள்ளார். பிவி சிந்து உள்ளிட்ட வீராங்கனைகளும் தங்களது நன்கொடைகளை அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், கொரோனா பாதிப்பில் அவதியுற்றுள்ள இந்திய மக்களுக்கு இந்திய கிரிக்கெட் சங்கம் பிசிசிஐ 51 கோடி ரூபாய் நன்கொடையை பிரதமர் நிவாரண நிதிக்கு அறிவித்துள்ளது. பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, செயளலார் ஜெய்ஷா உள்ளிட்டவர்கள் இணைந்து பிசிசிஐ டிவிட்டர் தளத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
NEWS : BCCI to contribute INR 51 crores to Prime Minister @narendramodi ji's Citizen Assistance and Relief in Emergency Situations Fund
— BCCI (@BCCI) March 28, 2020
More details here - https://t.co/kw1yVhOO5o pic.twitter.com/RJO2br2BAo
இதனிடையே பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியும் தனது டிவிட்டர் பக்கத்தில் தனியாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த இக்கட்டான நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும்வகையில் இந்த நிதியுதவி அளிக்கப்படுவதாக பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.