முதல் போட்டியில் கேகேஆர்
மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையில் ஐபிஎல்லின் 5வது ஆட்டமாக அபுதாபியில் இன்று போட்டி நடைபெறவுள்ளது. இந்த சீசனில் தன்னுடைய முதல் போட்டியில் இன்று மோதவுள்ள கேகேஆர் அணி சிறப்பான பேட்டிங் மற்றும் பௌலிங் ஆர்டருடன் மும்பை இந்தியன்ஸ் அணியை சந்திக்க உள்ளது.
கோச் மெக்கல்லம் அறிவிப்பு
இந்த போட்டியில் மட்டுமின்றி தொடர் முழுவதிலும் அணியின் சுப்மன் கில் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கி விளையாடுவார் என்று அணியில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கோச் பிரென்டன் மெக்கல்லம் சில தினங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார். இதன்மூலம் யூஏஇயின் மைதானங்களின் நிலைக்கு ஏற்ப அவர் அணிக்கு சிறப்பான துவக்கத்தை அளிப்பார் என்றும் மெக்கல்லம் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
ரிக்கி பாண்டிங் பாராட்டு
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் கோச் ரிக்கி பாண்டிங், கேகேஆர் அணியின் சிறப்பான மற்றும் தீவிரமான வீரர் சுப்மன் கில் என்று பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் அந்த அணியின் துவக்க வீரராக களமிறங்குவார் என்று தான் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அப்பிரண்ட் மற்றும் பேக்பூட் நிலைகளில் அவர் சிறப்பாக உள்ளதாகவும் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.
பாண்டிங் ஆரூடம்
இந்திய வீரர்களில் இந்த சிறப்பை அதிகமாக பார்க்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதேபோல ஷார்ட் பந்துகளை எதிர்கொள்வதிலும் அவர் சிறப்பாக உள்ளதாகவும் பாண்டிங் கூறியுள்ளார். இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஐபிஎல்லில் மட்டுமின்றி, டெஸ்ட் போட்டிகளிலும் மிகச்சிறந்த வீரராக கில் எதிர்காலத்தில் மிளிர்வார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.