ஏப்ரல், மே மாதங்களில் ஐபிஎல்
இந்தியா -இங்கிலாந்து இடையிலான 3 வடிவங்களில் தொடர்கள் அடுத்தடுத்து நடைபெறவுள்ளது. தற்போது டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து டி20 மற்றும் ஒருநாள் போட்டித் தொடர்கள் நடைபெறவுள்ளன. இதைதொடர்ந்து வரும் ஏப்ரல், மே மாதங்களில் ஐபிஎல் 2021 தொடர் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஐபிஎல் 2021?
ஐபிஎல் 2020 தொடர் கொரோனா வைரஸ் காரணமாக யூஏஇயில் நடைபெற்ற நிலையில், இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் நடக்கும் இடம் மற்றும் துவங்கும் தேதி ஆகியவை குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் இந்தியாவில் நடத்தவே முன்னுரிமை அளிக்கப்படும் என்று பிசிசிஐ சார்பில் முன்னதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் முடிவு
தற்போது இங்கிலாந்து -இந்தியா இடையிலான போட்டிகளில் ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டுவரும் நிலையில், ஐபிஎல்லில் ரசிகர்களை அனுமதிப்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தற்போது அறிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.
டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன
மேலும் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையில் அகமதாபாத்தின் மோதேரா மைதானத்தில் அடுத்ததாக நடைபெறவுள்ள பகலிரவு டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த மைதானத்தில் 1,10,000 ரசிகர்கள் ஒரே நேரத்தில் அமர்ந்து பார்க்க முடியும் என்ற நிலையில் அதில் 50 சதவிகித ரசிகர்கள் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.