தோல்விக்கான காரணம்
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வேகப்புயல் பும்ராவால் ஒரு விக்கெட் கூட வீழ்த்த முடியாதது, புஜாரா, கேப்டன் கோலியின் மோசமான ஆட்டம், முக்கியமான கேட்ச்களை தவற விட்டு பீல்டிங் சொதப்பல் ஆகியவை இந்தியாவின் தோல்விக்கு மிக முக்கிய காரணமாக உள்ளன. ஆனால் இதையெல்லாம் விட இந்தியாவின் தோல்விக்கு இன்னொரு காரணமும் உள்ளது. அதுதான் ரிசர்வ் டே.
ரிசர்வ் டே
அது என்ன ரிசர்வ் டே? இது எப்படி இந்தியாவின் தோல்விக்கு காரணமாக முடியும்? என்று கேட்கிறீர்களா? ஐ.சி.சி நடத்தும் மிக முக்கியமான தொடரின் முக்கிய போட்டியில் வருண பகவான் மழையை பொழிந்து போட்டியை நடத்த முடியாமல் தடை செய்தால், அதற்கு மறுநாள் அந்த ஆட்டம் நடைபெறுவதே ரிசர்வ் டே ஆகும். இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் தொடக்கம் முதலே இந்திய அணியை விட மழை நன்கு விளையாடியது.
இந்தியாவுக்கு துரோகம்
இதனால்தான் ஆட்டம் ரிசர்வ் டே-வான 6-வது நாளை நோக்கி நகர்ந்தது. ஆனால் 6-வது நாள் வருண பகவான் ஓய்வெடுத்து, நியூசிலாந்து பெர்பெக்ட் கேம் விளையாடியதால் கோப்பை அவர்கள் வசம் சென்றுள்ளது. ரிசர்வ் டே இந்தியாவுக்கு காலை வாரி விடுவது இது முதன் முறை அல்ல. கடந்த 2019-ம் ஆண்டு உலக கோப்பையிலும் இந்தியாவுக்கு மிகப்பெரிய துரோகம் செய்தது ரிசர்வ் டே.
2019-ல் ஒரு சம்பவம்
ஆம்.. 2019 உலக கோப்பை ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றிகரமாக அரை இறுதிக்கு வந்து இதே நியூசிலாந்தை எதிர்கொண்டது. போட்டி நடந்தது இதே இங்கிலாந்தில் தான். முதலில் பேட்டிங் செய்த நியூசி 46.1 ஓவர்களில் 211/5 என்று இக்கட்டான நிலையில் தத்தளிக்க திடீரென வந்த மழை மைதானத்தை குளிப்பாட்டியது. விளைவு, ஆட்டம் அதே ஸ்கோருடன் மறுநாள் ரிசர்வ் டே-வுக்கு சென்றது.
தோனி ரன் அவுட் மறக்க முடியுமா?
மறுநாள் ஆட்டம் தொடர 50 ஓவர்களில் 239 ரன்கள் மட்டுமே எடுத்தது நியூசிலாந்து. ஆனால் இதையும் எட்டி பிடிக்க முடியாமல் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து நியூஸியிடம் சரண் அடைந்தது இந்தியா. ஆனாலும் இந்த ஆட்டத்தில் ஜடோஜாவின் போராட்டத்தையும், தோனியின் ரன்-அவுட்டையும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது.
தோல்வியை ரிசர்வ் செய்யும் டே
அன்று(2019) இந்தியாவுக்கு தோல்வியை பரிசளித்த ரிசர்வ் டே இன்றும் அதே நியூஸிலாந்திடம், அதே இங்கிலாந்தில் வைத்து இந்தியாவுக்கு மீண்டும் ஒரு தோல்வியை கையில் கொடுத்துள்ளது. ஆக ரிசர்வ் டே, இந்தியாவுக்கு தோல்வியை ரிசர்வ் செய்யும் டே-வாக மாறி வருகிறது. ''இவங்க ஒழுங்காக விளையாடினால் ரிசர்வ் டே-வாக இருந்தாலும் சரி, எந்த டே-வாக இருந்தாலும் சரி ஏன் தோற்க போகிறார்கள்?''என்று நீங்கள் கேட்பது புரிகிறது.
இனிதான் உண்மையான அக்னி பரிட்சை
ஆனால் இந்தியாவின் உண்மையான அக்னி பரிட்சை இனிமேல் ஆரம்பிக்க போகிறது. இந்தியாவில் மரண அடி வாங்கிய ஜோ ரூட் அண்ட் கோ சொந்த ஊரில் நடைபெற உள்ள டெஸ்ட்டில் சீரும் சிங்கமாய் வெகுண்டெழ தயாராக இருக்கிறார்கள். எனவே நியூசி உடனான தோல்வியை மறந்து விட்டு, இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முழு கவனம் செலுத்தினால் வெற்றி நமது பக்கமே. பொறுத்திருந்து பார்ப்போம்.