சிறந்த அணி, வீரர் அறிவிப்பு
கடந்த 10 ஆண்டுகளில் கிரிக்கெட்டின் 3 வடிவங்களில் வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கான விருதுகளை ஐசிசி அறிவித்து வருகிறது. இதில் சிறந்த அணி உள்ளிட்டவை நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் சிறந்த வீரர்கள் உள்ளிட்ட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஐசிசி சிறந்த கிரிக்கெட் வீரர்
இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளில் ஐசிசி சிறந்த கிரிக்கெட் வீரருக்கான சர் கார்பீல்ட் சோபர்ஸ் விருதை இந்திய கேப்டன் விராட் கோலி பெற்றுள்ளார். இதனிடையே, இந்திய அணியை திறம்பட வழிநடத்தி வரும் விராட் கோலிக்கு இந்த
விருது கொடுக்கப்பட்டுள்ளது முறையானது என்று பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
சிறப்பான அங்கீகாரம்
இந்நிலையில் பிசிசிஐ டிவியில் பேசிய விராட் கோலி தன்னுடைய விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரம் இது என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும் இந்த விருதை பெறுவது பெருமையை அளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மனம் திறந்த கோலி
கடந்த 10 ஆண்டுகளில் தனது மனதிற்கு நெருக்கமான வெற்றி என்றால் அது கடந்த 2011ல் பெற்ற உலக கோப்பை வெற்றி, கடந்த 2013ல் பெற்ற சாம்பியன்ஸ் கோப்பை வெற்றி மற்றும் கடந்த 2018ல் ஆஸ்திரேலிய மண்ணில் அவர்களுக்கு எதிரான டெஸ்ட் போட்டித் தொடரை வென்றது உள்ளிட்டவை என்று அவர் கூறியுள்ளார்.
கவனமாக இருக்க வேண்டியதன் அவசியம்
அணிக்காக அனைத்தையும் செய்ய தயாராக இருக்க வேண்டும் என்றும் மைதானத்தில் மட்டுமின்றி வெளியிலும் சிறப்பாக செயல்பட வேண்டிய அவசியம் உள்ளதாகவும் கோலி மேலும் குறிப்பிட்டார். அடுத்த 10 ஆண்டுகளுக்கு இலக்குகள் என்று எதுவும் இல்லையென்றாலும் பிட்னஸ் உள்ளிட்ட அனைத்திலும் கவனமாக இருக்க வேண்டியதன் அவசியத்தை தான் உணர்ந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
வெளிக்கொணரும் அவசியம்
மற்ற சாதனையாளர்கள் போல இருக்க தான் எப்போதுமே விரும்பியதில்லை என்றும் தன்னுடைய பெஸ்ட்டை தரவே தான் எப்போதும் முயற்சித்து வருவதாகவும் அவர் கூறினார். தன்னுடைய கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியை தான் அடுத்த 10 ஆண்டுகளிலும் தொடர விரும்புவதாகவும் அவர் கூறினார்.