சண்டிகர்: டி வில்லியர்சுக்கு பந்து வீசுவதுதான் சிரமமான விஷயம் என்று கூறியுள்ளார் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வீரருமான மிட்சேல் ஜான்சன்
ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக உலக கோப்பை வென்ற கையோடு ஆஸ்திரேலியாவில் இருந்து நேற்று, இந்தியா வந்தார் ஜான்சன். இன்றைய பயிற்சிக்கு பிறகு நிருபர்களிடம் ஜான்சன் கூறியதாவது:
பஞ்சாப் அணியின் வேகப்பந்து வீச்சாளர் சந்தீப் ஷர்மா சிறப்பாக முன்னேற்றம் கண்டுள்ளார். நல்ல வேகத்தில் அவர் பந்து வீசுவதை பயிற்சியின்போது பார்த்தேன். மற்றொரு புதிய வேகப் பந்து வீச்சாளர் சர்துல் தாகுரும் நல்ல பந்து வீச்சாளராக தென்படுகிறார். இவர்கள் இருவருமே வேகப்பந்தை கற்றுக்கொள்ள அதிக ஆர்வம் காண்பிக்கின்றனர். நான் சொல்லி கொடுப்பதை பொறுமையாக கேட்கின்றனர். இது ஒரு நல்ல பழக்கம்.
உலக கோப்பையில் பல முறை அணிகள் 300 ரன்களை தாண்டி ஸ்கோர் செய்தன. நடப்பு ஐபிஎல்லில் பல அணிகள் 200 ரன்களை கடக்கும் என்று நம்புகிறேன். அதேநேரம், பவுலர்களை குறைத்து எடைபோட்டுவிட வேண்டாம். பவுலர்களும், சமயோஜிதமாக யோசிக்க தொடங்கிவிட்டனர் என்பதை மறக்க வேண்டாம்.
உலக பேட்ஸ்மேன்களிலேயே பந்து வீச்சுக்கு சவாலானவர் என்றால் அது டி வில்லியர்ஸ்தான். அனைத்து வகை கிரிக்கெட்டிலும், அவர் பந்து வீச்சாளர்களுக்கு சவாலாக இருக்கிறார். நானும், என்னை போன்ற பல முன்னணி பவுலர்களும், டி வில்லியர்சுக்கு பந்து வீசும் சவாலை விரும்புகிறோம். அதேநேரம், டி20 போட்டிகளில், திறமையான எந்த ஒரு பேட்ஸ்மேனுமே போட்டியை மாற்றக் கூடியவர்தான் என்பதை மறுக்க முடியாது. இவ்வாறு ஜான்சன் கூறினார்.