ஜெர்சி மாற்றம்
இந்த போட்டியில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம், இந்திய அணியின் ஜெர்சி மாற்றப்பட்டுள்ளது. வழக்கமான நீல நிறத்துக்கு பதில் மஞ்சள் கலந்த ஆரஞ்சு வண்ணத்துக்கு உடை மாறியிருக்கிறது. அதற்கான காரணமும் இருக்கிறது.
இந்தியா, இங். ஆடை
இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு அணிகளுமே நீல நிற ஜெர்சி அணிந்து ஆடுகின்றன. எந்த அணிகள் விளையாடுகிறது என்பதை அதன் ஆடையை வைத்து தான் முதலில் அறியப்படும். ஆனால், இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளின் ஜெர்சி வண்ணம் நீலம்.
போட்டி நடத்தும் நாடு
உலக போட்டியை நடத்தும் அணியான இங்கிலாந்து அதன் ஜெர்சியை அணிந்து ஆடும். ஆகையால் இந்திய அணி ஜெர்சியை மாற்றிக்கொள்ளலாம். ஒரே நிறத்தில் ஜெர்சி அணியும் அணிகளுக்கு இடையேயான போட்டியில், போட்டியை நடத்தும் அணி அவர்களின் வழக்கமான ஜெர்சியையும் மற்றொரு அணி புது ஜெர்சியை அணியலாம் என்றும் ஐசிசி சலுகை வழங்கி இருக்கிறது.
இந்தியாவுக்கு புது ஜெர்சி
அதன்படி ஆப்கானிஸ்தான், இலங்கை, தென் ஆப்ரிக்கா அணிகள் அதற்கேற்ப ஜெர்சியை மாற்றிக் கொண்டு போட்டிகளில் கலந்து கொண்டன. அந்தவகையில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி புதிய ஜெர்சியில் ஆட உள்ளது. ஆரஞ்சு-நீல நிற கலவையிலான புதிய ஜெர்சி நேற்று வெளியிடப்பட்டது.
காங். குற்றச்சாட்டு
புதிய ஜெர்சிக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசு நாட்டையே, காவி மயமாக மாற்ற முயற்சிப்பதாக அந்த கட்சி குற்றம் சாட்டியது. பல்வேறு தரப்பில் இருந்தும், ஜெர்சி விவகாரத்தில் கடும் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன.
மாற்றம் ஏன்?
இந் நிலையில், எவ்வளவோ நிறங்கள் இருக்க ஆரஞ்சு நிறத்தை பிசிசிஐ தேர்வு செய்ததின் காரணம் தற்போது தெரிய வந்திருக்கிறது. இதுகுறித்து ஐசிசி தரப்பில் வெளியான தகவல்கள் வருமாறு: புதிய ஜெர்சிக்கு பல நிறங்கள் அதற்கான வாய்ப்புகள் கொடுக்கப்பட்டன. ஜெர்சி நிறத்தையும் மாற்ற வேண்டும். அதேநேரத்தில் அது இந்திய ரசிகர்களுக்கு வித்தியாசமாகவும் தெரியக்கூடாது என்று முடிவு எடுக்கப்பட்டது.
டி 20 நிறம்
என்ன செய்யலாம் என்று பல தரப்பில் பிசிசிஐ ஆலோசனை செய்தது. அதன் பின்னர், ஏற்கனவே இந்திய அணியின் டி20 ஜெர்சியில் ஆரஞ்சு நிறம் இருந்ததால், அதை தேர்வு செய்தால் ரசிகர்களும் அந்நியமாக இருக்காது என்பதால் பிசிசிஐ அதை தேர்வு செய்தது. அதன்படியே இந்திய அணியின் புதிய ஜெர்சி வடிவமைக்கப்பட்டுள்ளது என்று தெரிய வந்துள்ளது.